Published : 18 Sep 2019 04:08 PM
Last Updated : 18 Sep 2019 04:08 PM

கடும் துன்பத்தில் மக்கள்; மதம், மொழி என அமித் ஷா கவனத்தை திசை திருப்புகிறார்: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

சென்னை

மக்கள் கடுமையான துன்பத்தை எதிர்கொண்டிருக்கிறபோது மதம், மொழி பிரச்சினைகளை எழுப்பி, மக்களின் கவனத்தை திசை திருப்புகிற முயற்சியில் அமித் ஷா ஈடுபட்டிருக்கிறார் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (செப்.18) வெளியிட்ட அறிக்கையில், "சமீபகாலமாக இந்திய மக்களின் ஒற்றுமைக்கு உலை வைக்கிற வகையில் பாஜகவின் தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசி வருகிறார். இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி மட்டுமே என்று பேசி இந்தி பேசாத மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறார். அவரது நோக்கம் நிறைவேறுகிறதோ இல்லையோ, இந்தி பேசும் மக்களை மொழியின் அடிப்படையில் பாஜகவுக்கு ஆதரவு திரட்ட முயற்சிக்கிறார்.

கடந்த 70 ஆண்டு அனுபவத்தில் பல கட்சி ஜனநாயகம் தோற்றுவிட்டது. இதனால் நாட்டுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லை என்று உண்மைக்குப் புறம்பான ஆதாரமற்ற கருத்தை அமித் ஷா கூறியிருக்கிறார். இதன்மூலம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ஹிட்லர், முசோலினி பாதையில் சர்வாதிகார ஆட்சி முறையைக் கொண்டு வருகிற நோக்கத்தில் அவரது பதுங்குத் திட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதைவிட இந்தியாவுக்குப் பேரழிவு வேறு எதுவும் இருக்க முடியாது.

பல கட்சி ஆட்சி முறை தோற்றுவிட்டதாக அமித் ஷா மேலும் கூறுகிறார். இதற்கு என்ன அடிப்படை என்பதை அவர் விரிவாகக் கூறவில்லை. கடந்த 2004 முதல் 2014 வரை நடைபெற்ற பல கட்சிகள் இணைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிகழ்த்திய சாதனைகளை மூடிமறைத்து அமித் ஷா பேசியிருக்கிறார். அன்று நடைபெற்ற பல கட்சிகள் அடங்கிய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் தான் சுதந்திர இந்தியா காணாத வகையில் 2005 முதல் மூன்று ஆண்டுகள் 9 சதவீதத்திற்கு மேலாகத் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் 100 நாள் வேலை திட்டம், விவசாயிகளின் உரிமைகளைக் காக்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டம், அனைவருக்கும் கல்வி வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. விவசாயிகளுக்கு கடன் 2003-04 இல் பாஜக ஆட்சியில் 87 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. அது 2014 இல் 8 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது.

அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு வழங்கும் வகையில் 80 கோடி மக்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கி வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல, ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம், பொறியியல் படிப்பிற்காக பிணையில்லாமல் கல்விக் கடன் வழங்குகிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 24 லட்சம் மாணவர்களுக்கு ரூபாய் 56 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. இப்படி சாதனைப் பட்டியல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

காங்கிரஸ் ஆட்சியில் ஒரே நாளில் ரூபாய் 12 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் ஒன்றை அமித் ஷா கூறியிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்பட்ட 2ஜி வழக்கில் ரூபாய் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக ஊடகங்களின் துணையோடு ஆதாரம் இல்லாமல் பாஜக அவதூறுப் பிரச்சாரம் செய்தது.

ஆனால், அதே சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2ஜி வழக்கில் பல மாதங்களாக காத்திருந்தும் எந்த ஆதாரத்தையும் சிபிஐ வழங்கவில்லை எனக்கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது. இதைவிட ஒரு அவமானம் பாஜகவுக்கு வேறும் எதுவும் இருக்க முடியாது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடந்ததாக மீண்டும் அமித் ஷா கூறியிருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகும்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும், எந்த நீதிமன்றத்திலும் இல்லை. இன்றைக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு நீதிமன்றத்திற்கு முன்னால் தவிடு பொடியாகிற காலம் வெகு தொலைவில் இல்லை. ப.சிதம்பரத்தின் மீது விசாரணை என்று கூறி சிறையில் அடைக்கலாமே தவிர, ஆதாரங்களைத் திரட்டி வழக்கு போட முடியாது. அப்படி வழக்கு போட்டால், நீதிமன்றத்தில் அது தகர்த்தெறியப்படும்.

இந்தியாவின் பொருளாதாரத்தை 2024 ஆம் ஆண்டுக்குள் ரூபாய் 350 லட்சம் கோடியாக உயர்த்தப் போவதாக அமித் ஷா கூறுகிறார். இந்த அளவுக்கு நம்பிக்கையோடு இருக்கிற அமித் ஷா ரிசர்வ் வங்கியிடம் ரூபாய் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதியுதவியை ஏன் பெற்றார் என்பதை விளக்க வேண்டும். மத்திய அரசினுடைய கஜானா காலியாகி விட்ட நிலையில் தான் இதுவரை எந்த அரசும் பெறாத நிதியை பாஜக அரசு மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்றிருக்கிறது.

இத்தகைய அவலநிலையில் இருக்கிற பாஜக அரசினால் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க முடியவில்லை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூபாய் 90 ஆயிரம் கோடி மோசடி செய்த நிரவ் மோடி, விஜய் மல்லையா ஆகியோரை தேடிக் கண்டுபிடித்து இந்தியாவிற்குக் கொண்டு வந்து, விசாரணைக்கு உட்படுத்த முடியாத கையாலாகாத அரசாக பாஜக அரசு இருந்து வருகிறது.

காஷ்மீரில் 43 நாட்களாக துப்பாக்கிச் சூடு நடைபெறவில்லை என பெருமிதம் அடைகிறார் அமித் ஷா. ஆனால், 45 ஆயிரம் ராணுவ வீரர்களைக் குவித்து, ஏறத்தாழ 1 கோடியே 20 லட்சம் இஸ்லாமியர்களை அம்மாநிலத்தில் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல், தகவல் தொடர்பில்லாமல் அடைத்துவைத்து, காஷ்மீர் மாநிலத்தையே மயான பூமியாக மாற்றியதில் அமித் ஷா புளகாங்கிதம் அடைகிறார். மூன்று முன்னாள் முதல்வர்களைச் சிறையில் அடைத்த பாஜக, காஷ்மீரில் நிலவுகிற சூழல் குறித்துப் பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது ?

எனவே, அனைத்துத் துறைகளிலும் தோல்வி ஏற்பட்டு பொருளாதார மந்தநிலை காரணமாக மக்கள் கடுமையான துன்பத்தை எதிர்கொண்டிருக்கிற போது, மதம், மொழி பிரச்சினைகளை எழுப்பி, மக்களின் கவனத்தை திசை திருப்புகிற முயற்சியில் அமித் ஷா ஈடுபட்டிருக்கிறார். இவரது முயற்சியை முறியடிக்கிற வகையில் ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் கடுமையான பிரச்சாரத்தின் மூலம் மக்களிடையே வகுப்புவாத சக்திகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம்" என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x