Published : 17 Sep 2019 04:51 PM
Last Updated : 17 Sep 2019 04:51 PM

புதுச்சேரி அரசு பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியர் பணியிடை நீக்கம்

புதுச்சேரி

புதுச்சேரியில் அரசு பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி பள்ளியை பூட்டி பெற்றோர் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்..

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சார்ந்தவர் ராஜசேகரன். சமூக அறிவியல் ஆசிரியர். இவர் புதுச்சேரியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களில் ஆசிரியர் ஈடுபட்டு வருவதாக தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து 12 மாணவிகளின் பெற்றோர்கள் இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் அளித்துள்ளனர். அவர்கள் பள்ளிக்கே சென்று விசாரணை மேற்கொண்டதில் ஆசிரியர் இதுபோன்று பல்வேறு மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து வில்லியனூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துளள்னர். இவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் ஆசிரியரை கைது செய்ய சென்றபோது ஆசிரியர் தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில் ஆசிரியர் ராஜசேகரனை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பெற்றோர் இன்று (செப்.17) பள்ளியை பூட்டி ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர். இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிக்குள் செல்ல முடியாமல் வெளியே காத்திருந்தனர். இதனிடையே ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கல்வித்துறை உத்தரவை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x