Last Updated : 14 Sep, 2019 03:49 PM

 

Published : 14 Sep 2019 03:49 PM
Last Updated : 14 Sep 2019 03:49 PM

கூட்டு முயற்சியால் மட்டுமே பேனர் கலாச்சாரத்துக்கு தீர்வு: கிரண்பேடி

கிரண்பேடி: கோப்புப்படம்

புதுச்சேரி

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றதிலிருந்து வார இறுதி நாட்களில் கிராமம் மற்றும் நகர பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தூய்மை புதுச்சேரி, நீர்வளமிக்க புதுச்சேரி என முக்கியத்துவம் அளித்த அவர், தற்போது பசுமை புதுச்சேரி எனும் நோக்கில் செயல்பட்டு வருகின்றார்.

அதன்படி புதுச்சேரியின் இரண்டாவது பெரிய ஏரியான பாகூர் ஏரியை சுற்றி 3.7 கிலோ மீட்டர் தூரத்தில் 3000 மரக்கன்றுகளை நட திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றார். இப்பணியில் தன்னார்வலர்கள், பள்ளி மாணவர்கள் என பல தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கிரண்பேடி இன்று (செப்.14) தனது 234-வது ஆய்வாக பாகூர் ஏரிக்கு சென்றார். அங்கு 3000 மரக்கன்றுகள் நடும் பணியை பார்வையிட்டார். தொடர்ந்து பொதுமக்கள், சமூக அமைப்புகள், மாணவ, மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோருடன் ஏரிக்கரை வழியாக சுமார் மூன்றை கிலோ மீட்டர் நடந்து சென்ற கிரண்பேடி, அரங்கனுார் பக்கமாக உபரி நீர் வெளியேறும் பகுதியில் உள்ள பாகூர் ஏரி உருவாக காரணமான பங்காரி, சிங்காரி சிற்பங்களுக்கு மாலை அணிவித்து பூஜைகள் செய்து வழிப்பட்டார்.

அப்போது அவர் பேசும்போது, "பாகூர் ஏரியை புணரமைப்பு செய்து நீர் வழிப்பாதையை உருவாக்கியதில், பங்காரி, சிங்காரி சகோதரிகளின் பங்கு முக்கியமானது. இதே போல், புதுச்சேரிக்கு நீர் ஆதரத்தை உருவாக்கிய பல பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள். அவர்களை இந்த நேரத்தில் நாம் நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்திட வேண்டும். வரும் பொங்கல் பண்டிகையை இங்கு நாம் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடிட வேண்டும். அதற்குள், ஏரியின் சாலையை சிரமைத்திட வேண்டும்," என்றார்.

தொடர்ந்து அரங்கனுாரில் ஏரிக்கரை அருகே உள்ள எரமுடி அய்யனார் கோவிலில் கிரண்பேடி சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து, பாகூர்-கன்னியக்கோயில் சாலையில் இருக்கும் கொம்யூன் பஞ்சாயத்து குப்பை கிடங்குக்கு சென்று பார்வையிட்டார். அங்கு குப்பை நிரம்பி சாலையில் சிதறிக்கிடப்பதை கண்ட ஆளுநர் துறை அதிகாரிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "பேனர் கலாச்சாரம் சமூகத்துக்கு மிகுந்த பாதிப்பாகவும், உயிரிழப்புகளுக்கு காரணமாகவும் அமைந்துள்ளது. கூட்டு முயற்சியும், இரவு ரோந்து பணிகளிலும் மட்டுமே பேனர் கலாச்சாரத்துக்கு தீர்வு கிடைக்கும். பொதுப்பணித்துறை, போக்குவரத்து உள்ளிட்ட துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமே இதனை தடுக்க முடியும்," என்றார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம், கண்காணிப்பு பொறியாளர்கள் பெட்ரோ குமார், சேகர், செயற் பொறியாளர் ஜீவதயாளன், உதவி பொறியாளர் சங்கர், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x