Published : 13 Sep 2019 05:34 PM
Last Updated : 13 Sep 2019 05:34 PM

மணிமுத்தாறில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை வனத்துறையின் கூண்டில் சிக்கியது

அம்பாசமுத்திரம்

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் சுற்றித் திரிந்து பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்கள், கிராமங்களுக்குள் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி புகுந்துவிடுகின்றன.

மணிமுத்தாறு அண்ணா நகர் பகுதியில் ராமர் என்பவரது தொழுவத்தில் கட்டியிருந்த ஆட்டை கடந்த ஆகஸ்ட் மாதம் சிறுத்தை கடித்துக் கொன்று, இழுத்துச் சென்றது. இதுகுறித்து, வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, மணிமுத்தாறு பகுதியில் கேமராக்கள் பொருத்தி, சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்தனர். இதில், சிறுத்தை நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது. சிறுத்தை அடிக்கடி வந்து செல்லும் பகுதியில் 2 இடங்களில் கூண்டு அமைத்து, அதில் தினமும் மாலையில் ஆட்டை கட்டிப் போட்டு கண்காணித்தனர்.

பல நாட்கள் ஆகியும் சிறுத்தை சிக்கவில்லை. அவ்வப்போது நாய்களை வேட்டையாடி சிறுத்தை இழுத்துச் சென்றது. இந்நிலையில், இன்று அதிகாலையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியிருப்பதை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பார்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரகர் கார்த்திகேயன், வனவர் முருகேசன் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். கூண்டில் சிக்கியிருந்த சுமார் இரண்டரை வயதுள்ள பெண் சிறுத்தையை முண்டந்துறை வனப்பகுதிக்குக் கொண்டுசென்று, விடுவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x