Published : 10 Sep 2019 11:41 AM
Last Updated : 10 Sep 2019 11:41 AM

பிற நாடுகளுக்கு மோடி கடனுதவி: சீமான் விமர்சனம்

சென்னை

பிரதமர் மோடி, பிற நாடுகளுக்குக் கடனுதவி அளிப்பது முரணாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாடு ரஷ்யாவில் உள்ள விளாதிவோஸ்டக் நகரில் செப்டம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை 2 நாட்கள் நடந்தது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய மோடி, ''கிழக்கு பொருளாதார மாநாடு என்பது தூரக் கிழக்கு பிராந்தியத்தில் வணிக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதோடு, இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான ஒரு பெரிய வாய்ப்பை வழங்குகிறது.

இந்த முயற்சியை மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை வெகுவாகப் பாராட்டுகிறேன். அவரின் இந்த முயற்சிக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும். தூரக் கிழக்கின் வளர்ச்சியை மையப்படுத்தி ரூ.100 கோடி கடனுதவி அளிக்கப்படும்'' எனக் கூறினார்.

இந்நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி ஆகியவை மக்களை வாங்கும் திறனற்றவர்களாக மாற்றிவிட்டது. இதனால்தான் ஆட்டோமொபைல் துறை, ஆடை உற்பத்தி, தேயிலைத் துறைகள் ஆகியவை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

இதைவிட இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது கூட, ரிசர்வ் வங்கியிடம் இருந்து இவ்வளவு பெரிய தொகையை மத்திய அரசு வாங்கியதில்லை. ஒரு நாட்டின் முதல்வர், நாடு நாடாகச் சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்து, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டு வருகிறார். ஆனால் அதே நாட்டின் பிரதமர் மோடி, பிற நாடுகளுக்குக் கடனுதவி அளிப்பது முரணாக உள்ளது.

இது நாட்டு மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லாததையே காட்டுகிறது. இலங்கையின் கரன்சி வீழ்வதில்லை. ஏன் இந்தியக் கரன்சி மட்டும் வீழ்ச்சியடைந்துள்ளது? இதற்குப் பிரதமர் மோடிதான் பதில் சொல்லவேண்டும். மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி ஆகியவைதான் மக்களை வாங்கும் திறனற்றவர்களாக மாற்றிவிட்டது என்று பொருளாதார மேதைகளும் வல்லுநர்களும் சொல்கின்றனர்'' என்று சீமான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x