Published : 05 Sep 2019 11:50 AM
Last Updated : 05 Sep 2019 11:50 AM
திருப்பூர்
மறைந்த தலைவர் கருணாநிதிக்குப் பிறகு, எங்களை வீழ்த்தி வெற்றித் தளபதியாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என, பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான, வெள்ளக்கோவில் சாமிநாதன் திமுகவின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராவார். திமுகவின் இளைஞரணி துணைச் செயலாளராக இருந்த அவர், 2017-ல் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக ஆனபோது, சாமிநாதன் இளைஞரணிச் செயலாளரானார். இந்நிலையில், உதயநிதியை இளைஞரணிச் செயலாளராக்குவதற்காக முன்கூட்டியே, வெள்ளக்கோவில் சாமிநாதன் அப்பொறுப்பிலிருந்து விலகினார். அதன்பின் திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி பொறுப்புக்கு வந்தார்.
இந்நிலையில், வெள்ளக்கோவில் சாமிநாதனின் இல்லத் திருமண விழா இன்று (செப்.5) திருப்பூரில் நடைபெற்றது. இவ்விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருமண விழாவில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், "கருணாநிதிக்குப் பிறகு யார் என்று வருகிறபோது, மு.க.ஸ்டாலின், தளபதியாக மட்டுமல்லாமல், எங்களையெல்லாம் வீழ்த்திய வெற்றித் தளபதியாகவும் திகழ்கிறார். நாங்கள் இன்னும் கருணாநிதி போல அதிகம் உழைக்க வேண்டும் என்பதைத்தான் இதிலிருந்து நான் எடுத்துக்கொள்கிறேன்" என சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில், சிபி.ராதாகிருஷ்ணனும் உள்ளார். இருமுறை மக்களவை உறுப்பினராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி வகித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில், கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனிடம் தோல்வியடைந்தார்.
பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, சமீபத்தில் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர், மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன் அவரை 'வெற்றித் தளபதி' என பாராட்டியுள்ளார். சமீபத்தில், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட நிலைமை, தமிழக எதிர்க்கட்சி தலைவருக்கும் ஏற்படும் என ஹெச்.ராஜா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT