Published : 30 Aug 2019 01:19 PM
Last Updated : 30 Aug 2019 01:19 PM

பழநி பஞ்சாமிர்த நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை: 2-வது நாளாகத் தொடர்கிறது

பழநி

பழநியில் பஞ்சாமிர்தம் தயாரித்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்களில் வருமானவரித் துறையினர் நேற்று நடத்திய சோதனை, இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலையடிவாரப் பகுதியில் தனியார் பஞ்சாமிர்தம் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள் உள்ளன. நேற்று காலை 8 மணிக்கு 20 வாகனங்களில் வந்த வருமானவரித் துறை அதிகாரிகள் 40 பேர், 2 பெரிய நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் இன்று பஞ்சாமிர்தம் தயாரிப்பு நிலையம், விற்பனை நிலையம் என பழநியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் 55 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

பழநி கோயில் பஞ்சாமிர்தத்துக்கு இணையாக இந்த 2 நிறுவனங்களிலும் பஞ்சாமிர்தம் விற்பனையாகிறது. இருந்தபோதிலும் வருமான வரி செலுத்துவது குறைவாக இருப்பதால் சந்தேகமடைந்து இந்த திடீர் சோதனை மேற்கொண்டதாக கூறப் படுகிறது.

சோதனையின்போது விற்பனை நிலையங்கள் அடைக்கப்பட்டன. பஞ்சாமிர்தம் தயாரிப்பு நிலையங்களிலும் தொழிலாளர்களை வெளியேற அனுமதிக்காமல் சோதனை மேற்கொண்டனர். நேற்று காலை தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வருமானவரித் துறை அதிகாரிகள் சென்னை மற்றும் ஆந்திராவில் இருந்து வந்துள்ளனர். பஞ்சாமிர்தம் தயாரித்து விற்பனை செய்யும் 2 நிறுவனங்களும் வரி ஏய்ப்பு செய்ததாகவும், பஞ்சாமிர்த டப்பாக்களில் விலையோ, ஜிஎஸ்டி விவரங்களோ குறிப்பிடப்படவில்லை என்றும் புகார் வந்ததாகக் கூறப்படுகிறது.

வரி ஏய்ப்பு குறித்து இதுவரை வருமான வரித்துறையினர் எதுவும் தெரிவிக்கவில்லை. இதன் விவரங்கள் சோதனையில் முடிவில்தான் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x