Published : 29 Aug 2019 02:30 PM
Last Updated : 29 Aug 2019 02:30 PM

முதல்வர் முதல் முறையாக வெளிநாட்டுக்குச் செல்கிறார்; போகட்டுமே: திருநாவுக்கரசர்

சென்னை

ஒரு முதல்வர் முதல் முறையாக வெளிநாட்டுக்குச் செல்கிறார். போய்விட்டு தமிழகத்துக்குப் பயன் சேர்க்கும் வகையில், திரும்பி வர வேண்டும் என்று திருச்சி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு வாழ் தமிழர்கள், பிற முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக, சென்னையில் இருந்து நேற்று (ஆக.28) காலை லண்டன் புறப்பட்டார்.

14 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்து முதல்வர், செப்டம்பர் 10-ம் தேதி தமிழகம் திரும்புகிறார். முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து சென்னை விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, ''அதிமுக ஆட்சியில் போடப்பட்ட முதலீட்டாளர்கள் ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் மாநாடு என்ற பெயரில் செலவுதான் ஆகியிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு வருமானமோ, தொழிலோ, அதன் மூலம் வேலைவாய்ப்போ இதுவரை பெரிய அளவில் ஒன்றும் கிடைக்கவில்லை.

இது ஏமாற்றம் தருவதாகத்தான் அமைந்துள்ளது. இருந்தாலும் ஒரு முதல்வர் முதல் முறையாக வெளிநாட்டுக்குச் செல்கிறார். போகட்டுமே. போய்விட்டு தமிழகத்துக்குப் பயன் சேர்க்கும் வகையில், திரும்பி வந்தால் சரி'' என்றார் திருநாவுக்கரசர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x