

சென்னை
உலகக்கோப்பை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வரும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பின் (ஐஎஸ்எஸ்எப்) உலகக்கோப்பை போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார்.
10 மீ ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் சீனியர் பிரிவில் ஏற்கெனவே அபூர்வி சண்டிலா, அஞ்சலி பகவத் ஆகியோர் மட்டுமே தங்கம் வென்றிருந்த நிலையில் 3-வது வீராங்கனையாக இளவேனில் உயர்ந்துள்ளார். இளவேனிலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "உலக அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனிலுக்கு மனப்பூர்வமான பாராட்டுகள்.
பிரேசிலில் நடைபெற்ற 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்த சாதனையைப் புரிந்திருக்கும் இளவேனில், கடந்த ஆண்டு ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியிலும் வெள்ளி வென்றவர். 20 வயதிலேயே இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கும் இளவேனில், உலக அளவில் இன்னும் பல சாதனைகளைப் புரிந்திட வாழ்த்துகிறேன்", எனத் தெரிவித்துள்ளார்.