Published : 27 Aug 2019 01:38 PM
Last Updated : 27 Aug 2019 01:38 PM

முதல்வர் வெளிநாடு செல்லும்போது தமிழகத்துக்கு ‘கேர் டேக்கர்’ தேவையா?- அமைச்சர் ஜெயக்குமார் பதில்

சென்னை

முதல்வர் வெளிநாடு செல்லும் நிலையில், அவரின் பொறுப்புகளைக் கவனித்துக்கொள்ள கேர் டேக்கர் அவசியமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு வாழ் தமிழர்கள், பிற முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக, சென்னையில் இருந்து நாளை (ஆக.28) காலை புறப்பட்டு லண்டன் சென்றடைகிறார்.

அங்கு சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினரை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்வில் பங்கேற்கிறார். இந்துஜா உள்ளிட்ட பல தொழில் முதலீட்டாளர்களையும் சந்திக்கிறார்.

லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு செப். 2-ம் தேதி நியூயார்க் செல்லும் முதல்வர், அங்கு அமெரிக்க வாழ் தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதி நிதிகள், அமெரிக்க தொழில் முனை வோர் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

அமெரிக்காவில் இருந்து செப்.7-ம் தேதி புறப்பட்டு துபாய் செல்லும் முதல்வர், செப். 8, 9 ஆகிய இரு தினங்களும் அங்கு நடக்கும் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுவிட்டு, 10-ம் தேதி தமிழகம் திரும்புகிறார்.

இதற்கிடையே முதல்வர் வெளிநாடு செல்வதால், அவரின் பொறுப்புகளைக் கவனித்துக்கொள்ள ஒருவர் நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. இதை மறுத்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

அதிமுக சார்பில் 28 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''தற்போது தொழில்நுட்பம் மிகுந்த நவீன மயமாகி விட்டது. அந்த வகையில் இப்போது கேர் டேக்கர் என்பதே அவசியமில்லை. பத்திரிகைகள்தான் கேர் டேக்கர் குறித்துப் பேசுகின்றன.

ஆனால் மக்களை முழுமையாக கவனித்து, கேர் டேக் செய்யும் வகையில்தான் அரசும் முதல்வரும் உள்ளனர். எனவே நிச்சயமாக தமிழகம் முழுமையாக முதலீடுகளைப் பெறும் வகையில் சுற்றுப்பயணம் அமையும்'' என்றார் ஜெயக்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x