Published : 22 Aug 2019 11:36 AM
Last Updated : 22 Aug 2019 11:36 AM
சென்னை
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது அறிவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அதிகாரம் என்று கவிஞர் வைரமுத்து விமர்சித்துள்ளார்.
என்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. அண்மையில் முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்ய சிபிஐ தீவிரம் காட்டி வந்தது. இந்தநிலையில் சிதம்பரம் நேற்று இரவு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டுக் கதவு மூடியிருந்ததால் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக்குறித்து உள்ளே சென்று அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, ''ப.சிதம்பரம் கைது என்பது அறிவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அதிகாரம்; ஜனநாயகம் இதை ரசிக்காது.வழக்கை அவர் சட்டப்படி எதிர்கொண்டு விட்டு விடுதலையாவார் என்று நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே வைரமுத்துவின் ட்வீட் குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT