Published : 14 Aug 2019 12:54 PM
Last Updated : 14 Aug 2019 12:54 PM
தருமபுரி
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ள நிலையில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் வெளியில் தெரியத் தொடங்கியுள்ளன.
ஒகேனக்கல்லில் அதிகபட்சமாக விநாடிக்கு 2.80 லட்சம் கனஅடி அளவுக்கு தண்ணீர் வந்ததால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பிரதான அருவி, சினி பால்ஸ் அருவி, ஐவர் பாணி அருவி உள்ளிட்ட இடங்களை வெள்ளம் முழுமையாக மூழ்கடித்து சென்றது.
இதற்கிடையில், கேரளா, கர்நாடகா மாநில பகுதிகளில் மழை குறையத் தொடங்கியது. எனவே, கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. எனவே, 12-ம் தேதி இரவில் நீர்வரத்து விநாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இது இன்று (ஆக.14) காலை 50 ஆயிரம் கனஅடியாகவும், 12 மணியளவில் 40 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்தின் அளவு குறையத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், வெள்ளப்பெருக்கின் போது தண்ணீருக்குள் மூழ்கிய பகுதிகளில் வெள்ளம் ஏற்படுத்திய சேதம் வெளியில் தெரிய தொடங்கியுள்ளது. ஆனால், பிரதான அருவியின் அருகில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளின் சேதம் தற்போது தெரிய வந்துள்ளது. பெண்கள் குளிக்கும் அருவி பகுதியில் கட்டுமானங்களை வெள்ளம் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. பெண்கள், ஆண்கள் குளிக்கும் அருவிகளுக்கு செல்லும் வழியில் இருந்த மின்கம்பத்தை அடியோடு வெள்ளம் சாய்த்துச் சென்றுள்ளது.
படிகள் சேதம்
இதுதவிர, தொங்கும் பாலத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலி, பாலத்தின் மீது ஏறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த படிகள் ஆகியவற்றிலும் வெள்ளம் சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது.
தொடரும் தடை
நீர்வரத்து குறைந்தபோதும், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவி மற்றும் ஆற்றில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு இந்த தடை அமலில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ள நிலைமை சீரடைந்த பின்னர், வெள்ளத்தில் சேதமான பாதுகாப்பு கட்டமைப்புகளை சீரமைத்த பின்னரே அருவியில் குளிக்கவும், தொங்கும் பாலத்துக்கு செல்லவும் அனுமதி வழங்கப்படும். இதுதவிர, நீர்வரத்தின் வேகம் சீரான பின்னர் பாதுகாப்பான சூழல் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பரிசல் இயக்கத்துக்கு அனுமதி வழங்குவர் என தெரிகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT