Last Updated : 12 Aug, 2019 08:14 PM

 

Published : 12 Aug 2019 08:14 PM
Last Updated : 12 Aug 2019 08:14 PM

கீழடி அகழாய்வில் புதிதாக அகலமான திண்டு கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக அகலமான திண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணற்றில் 8 உறைகள் வரை தோண்டப்பட்டுள்ளன.

கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இதை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல்துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய் ஜூன் 13-ம் தேதி தொடங்கியது. இதுவரை

முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு ஆகியோரது நிலங்களில் 23 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

கடந்த 2 மாதங்களில் மண்பாண்ட ஓடுகள், இரட்டை சுவர், வட்டச் சுவர், அகலமான சுவர், கல்லால் செய்யப்பட்ட மணிகள், உறைகிணறுகள், எலும்பாலான எழுத்தாணி, அகேட் அணிகலன்கள், உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று முருகேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அகலமான திண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரது நிலத்தில் ஏற்கனவே கண்டறியப்பட்ட உறைகிணற்றில் இதுவரை 8 உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன் உயரம் 10 அடி வரை உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x