Published : 12 Aug 2019 04:09 PM
Last Updated : 12 Aug 2019 04:09 PM
சென்னை
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுவது அனைத்தும் வாய்ச்சவடால், நாடகம் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் இன்று (திங்கள்கிழமை) நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "வேலூரில் திமுகவுக்குக் கிடைத்தது தோல்வி தான். நான் ஏற்கெனவே சொன்னது போல, அதிமுகவுக்குக் கிடைத்திருப்பது வெற்றிகரமான தோல்வி, திமுகவுக்குக் கிடைத்திருப்பது தோல்விகரமான வெற்றி, அவ்வளவுதான்.
காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் குற்றவாளி என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஏன் அந்த குற்றவாளியுடன் வைகோ கூட்டணி வைத்தார்? தனக்குப் பதவி என்று வரும்போது குற்றம் தெரியாது. தனக்குப் பதவி வேண்டாம் என்றவுடன் குற்றம் தெரியும். காங்கிரஸ் குற்றவாளி எனத் தெரிந்தும் ஏன் கூட்டணி வைத்தார்? இதில், திமுகவும் குற்றவாளி தான். குற்றவாளியுடன் இருப்பவர் குற்றவாளி தானே. திமுகவும் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்துதான், இலங்கை பிரச்சினையை மிக மோசமாகக் கையாண்டது.
வைகோ: கோப்புப்படம்
மோடியிடம் எதிர்த்துப் பேசும் துணிச்சல் எனக்கு இருக்கிறது என வைகோ இப்போது கூறுகிறார். ஆனால், ஏன் மன்மோகன் சிங்கிடம் பேசவில்லை? ஏன் சோனியா காந்தியிடம் பேசவில்லை? மோடிக்கு எதிராக வைகோ கருப்பு பலூன் விட்டாலும், தாயுள்ளத்துடன் அவரை ஏற்றுக்கொண்டு உபசரிக்கும் குணம் மோடியிடம் இருக்கிறது. எல்லாமே வாய்ச்சவடால், நாடகம் என்பது தெளிவாகத் தெரிகிறது", என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT