Published : 12 Aug 2019 12:05 PM
Last Updated : 12 Aug 2019 12:05 PM

ஊட்டியில் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: ஸ்டாலின் வழங்கினார்

ஊட்டி,

ஊட்டியில் கனமழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின், தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு தொடக்கத்தில் சரிவர பெய்யாத நிலையில், கடந்த வாரம் தீவிரமடைந்தது. இடைவிடாமல் பெய்ததால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரியில் அதிக அளவு மழை பதிவானது. தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில்தான் அதிகபட்ச மழை பதிவாகியது.

நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்தைவிட 25 சதவீதம் கூடுதலாக மழை பெய்தது. இதனால் நீலகிரி மாவட்டத்திலுள்ள 6 வட்டங்களில், 4 வட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் 233 பகுதிகள் பாதிக்கப்பட்டவையாக அடையாளம் காணப்பட்டன.

இதற்கிடையே நீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின், மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து இன்றும் மழை சேதங்களை ஆய்வு செய்தார் ஸ்டாலின்.

சில நாட்களுக்கு முன்னர், உதகை அருகே குருத்துக்குளி கிராமத்தை சேர்ந்த சுசீலா மற்றும் விமலா ஆகியோர் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களை இன்று நேரில் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், இரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். அப்போது அவருடன் நீலகிரி எம்.பி. ஆ.ராசா உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x