Published : 12 Aug 2019 11:12 AM
Last Updated : 12 Aug 2019 11:12 AM

வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை; பாசனத்துக்காக நாளை திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை

மேட்டூர் அணை பாசனத்திற்காக நாளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 9-ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.50 அடியாக இருந்த நிலையில், கர்நாடகாவில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது.

தொடக்கத்தில் 7 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, ஒவ்வொரு நாளும் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் இரவு 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 61.88 அடியாகவும் நீர் இருப்பு 26.10 டிஎம்சி-யாகவும் இருந்தது. விநாடிக்கு 82 ஆயிரம் கனஅடி வீதம் நீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது.

அணையின் நீர்மட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 67.40 அடியாகவும், நீர் இருப்பு 30.50 டிஎம்சியாகவும் உயர்ந்தது. அதே வேளையில், நீர்வரத்து விநாடிக்கு 93 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில், இன்று காலை 10 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு ஒரு லட்சத்து 10,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 73.60 அடியை எட்டியது. நேற்றிரவு வரை ஒரே நாளில் நீர்மட்டம் 12 அடி அதிகரித்துள்ளது.

இதனிடையே, பிலிகுண்டுலுவில் காவிரியின் நீர்வரத்து விநாடிக்கு 1.40 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. எனவே, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் உள்ளது.

மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால், காவிரி டெல்டா பாசனத்திற்காக அணை நாளை திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக இன்று மாலை விமானம் மூலம் சேலம் செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x