Published : 19 Jul 2015 05:57 PM
Last Updated : 19 Jul 2015 05:57 PM

சினிமாவில் சிகரெட் பிடித்து ரஜினி புகழை கெடுக்காதீர்: தனுஷுக்கு அன்புமணி கடிதம்

திரைப்படங்களில் புகைபிடிக்கும் உங்களது செயல், உங்களது மாமனார் நடிகர் ரஜினிகாந்த் புகழுக்கு இழுக்கு செய்வதாக அமைகிறது. இளைஞர்கள் நலனுக்காகவும், உங்கள் நலனுக்காவும் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைக் கைவிட வேண்டும்" என்று நடிகர் தனுஷுக்கு பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நடிகர் தனுஷுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "இன்று தமிழ்நாட்டின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக நீங்கள் திகழ்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

மாரி திரைப்படத்தின் ஏராளமான காட்சிகளில் நீங்கள் புகைபிடித்தபடி நடித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் உங்களுடைய ரசிகர்களாக இருக்கும் நிலையில் இந்த தவறான செயல் உங்கள் ரசிகர்களை புகையிலைக்கு அடிமையாக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றே நம்புகிறேன்.

புகையிலைக்கு அடிமையாவோரில் 50% பேர், புகையிலையால் ஏற்படும் கொடிய நோய்க்கு பலியாகி உரிய வயதாகும் முன்பே வலிமிகுந்த மரணத்தை தழுவுவார்கள் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் புகைபழக்கத்துக்கு அடிமையாகும் உங்களது ரசிகர்களும் இடம்பெறக் கூடும்.

உலகில் மிக அதிகமானோரைக் கொல்லும் மிகப் பெரிய தீமை புகையிலைதான். புகையிலைப் பொருட்களால் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் கொலை செய்யப்படுகிறார்கள். இத்தீமையால் இந்தியாவில் ஆண்டுக்கு பத்து லட்சம் பேர் உரிய வயதாகும் முன்பே இறக்கின்றனர்.

புகையிலைப் பொருட்களால் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம், நுரையீரல் பாதிப்பு, தோல்நோய்கள், ஆண்மைக்குறைவு, மலட்டுத் தன்மை எனப் பல கேடுகள் நேருகின்றன.

இளைஞர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரிப்பதற்கு திரைப்படங்களில் இடம்பெரும் புகைபிடிக்கும் காட்சிகள் முக்கிய காரணமாக உள்ளன. சிகரெட் நிறுவனங்கள் திரைப்படங்களை பயன்படுத்தி புகைபழக்கத்தை திணித்து வருகின்றன. உரிய வயதாகும் முன்பே இறந்து போகும் வாடிக்கையாளர்களை ஈடுகட்டவே சிகரெட் நிறுவனத்தினர் திரைப்படங்களில் மறைமுகமாக விளம்பரம் செய்கின்றனர்.

மாரி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள புகைபிடிக்கும் காட்சிகள் தற்செயலானவை அல்ல என்றே கருத வேண்டியுள்ளது. பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும், கடைகளிலும் புகையிலை விளம்பரம் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதால், சிகரெட் நிறுவனங்களின் சட்டவிரோத விளம்பரமாகக் களமாக திரைப்படங்கள் மாற்றப்பட்டுள்ளன என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

சிகரெட், பீடி நிறுவனங்களிடமிருந்து பெருமளவு பணம் லஞ்சமாக பெற்றுக்கொண்டுதான் புகைபிடிக்கும் காட்சிகள் சினிமாக்களில் திணிக்கப்படுகின்றன என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது.

திரைப்படங்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை திணிக்கின்றன என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களை இங்கே அளிக்க விரும்புகிறேன்.

1. புகழ்பெற்ற மருத்துவ ஆய்வு பத்திரிகையான லான்செட் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் புகைபிடிக்க தொடங்கும் இளம் வயதினரில் 52% பேர் திரைப்படங்களை பார்த்து புகைபிடிக்க கற்றுகொள்வதாகக் கூறியது. (Effect of Smoking on Movies - THE LANCET 2003)

2. உலக சுகாதார நிறுவனம் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட "பாலிவுட்: பலியா அல்லது நண்பனா" எனும் ஆய்வில் இந்தியத் திரைப்படங்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை திணிக்கின்றன என்பதை தெளிவாக எடுத்துரைத்தது. கூடவே, சிகரெட் நிறுவனங்களிடம் திருட்டுத்தனமாக லஞ்சம் வாங்கிக்கொண்டு இக்காட்சிகள் திணிக்கப்படுகின்றன என்பதையும் அந்த ஆய்வு வெளிக்கொண்டுவந்தது. (BOLLYWOOD - VICTIM OR ALLY- WHO 2003)

4. உலக சுகாதார நிறுவனம் 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட "புகையில்லா திரைப்படங்கள்: ஆதாரங்களில் இருந்து செயல்பாட்டுக்கு" எனும் நூலில் - திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் பெரும் கேடாக மாறிவிட்டதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. (Smoke-free movies- from evidence to action WHO 2009)

5. "பாலிவுட் படங்களில் புகையிலை பயன்பாடும், விளம்பரமும், அவற்றால் இந்திய இளைஞர்களின் புகையிலைப் பழக்கமும்" எனும் 2011 ஆம் ஆண்டு ஆய்வுக்கட்டுரை, திரைப்படம் பார்க்கும் இந்திய இளைஞர்கள் புகையிலைக்கு அதிகம் அடிமையாவதை நிரூபித்துள்ளது. (Tobacco use in Bollywood movies, association with tobacco use among Indian adolescents - BMJ Tobacco Control 2011)

6. 26.03.2012 அன்று கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், "திரைப்படங்கள் மூலம் திணிக்கப்படும் மறைமுக புகையிலை விளம்பரங்கள் சமுதாயத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன". "திரைப்படங்களில் புகைபிடிப்பதை கட்டுப்படுத்தாவிட்டால், இந்திய அரசியல் அமைப்பின் 21 ஆம் பிரிவில் உறுதியளிக்கப்பட்டுள்ள குடிமக்களின் உயிர்வாழும் உரிமை பாதிக்கப்படும்", "திரைப்படங்களில் புகைபிடிப்பதைக் கட்டுப்படுத்தும் விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது. (Kerala Voluntary Health Services Vs. Union of India (2012) 246 KLR 214)

நடிகர் ரஜினிகாந்த் வழியை பின்பற்றுங்கள்

தமிழகத்தின் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், சூரியா, விக்ரம் உள்ளிட்டவர்கள் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என வாக்குறுதி அளித்து அதனை உறுதியாக பின்பற்றியும் வருகின்றனர்.

அதை விட முக்கியமாக, உங்களது மாமனாரும், தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் எனப் புகழப்படுபவருமான நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல், தனது ரசிகர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட்டுவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகப் பண்பாட்டில் மாமனார் என்பவர் தந்தைக்கு சமமானவராகக் கருதப்படுகிறார். தந்தையின் புகழைக் காப்பாற்றும் கடமை மகனுக்கு இருப்பது போல - மாமனாரின் புகழைக் காப்பாற்ற வேண்டிய கடமை மருமகனுக்கும் உண்டு. திரைப்படங்களில் புகைபிடிக்கும் உங்களது செயல் உங்களது மாமனார் நடிகர் ரஜினிகாந்த் புகழுக்கு இழுக்கு செய்வதாக அமைகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனவே, தமிழ்நாட்டின் பல லட்சம் சிறுவர்கள், இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடிப்பதை நீங்கள் கைவிட வேண்டும். மேலும், இனி திரைப்படங்களில் புகைபிடிப்பிடிக்க மாட்டேன் என பகிரங்கமாக அறிவிக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக இளைஞர்களின் நலனுக்காக மட்டுமின்றி, உங்களது உடல்நலத்துக்காகவும் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நீங்கள் கைவிட வேண்டும் என்று உங்களது சகோதரனாக, ஒரு மருத்துவனாக கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் நீண்ட ஆயுளைப் பெற்று, தமிழ்த் திரையுலகில் பலப்பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்" என்று அந்தக் கடிதத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x