Published : 11 Aug 2019 11:08 AM
Last Updated : 11 Aug 2019 11:08 AM
மதுரை
திமுக, பாஜகவோடு இணக்கமாகச் செல்ல முயற்சிப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் மாடக்குளம் கண்மாயை ரூ.85 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிவைத்த அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வைகை அணையை தூர்வாரும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார். அதில் அரசியல் தலையீடு எதுவும் இருக்காது.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் சிறுபான்மையினரை திசைதிருப்பி திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக மெகா கூட்டணியை உருவாக்கியும் அதிமுகவின் வாக்கு சதவீதம் குறையவில்லை. திமுக குடும்பக் கட்சி என்பதை வேலூரில் ஸ்டாலின் மீண்டும் நிரூபித்திருக்கிறார். இப்போதே பாஜகவோடு கூட்டணிக்கு வழி பார்க்கிறார் டி.ஆர்.பாலு. அவர் பாஜகவும், திமுகவும் நண்பர்கள் என்று சொல்லி பாஜகவோடு இணைய துடிக்கிறார்.
திமுக பாஜகவோடு இணக்கமாக முயற்சிப்பதற்கான சாட்சிதான், பாஜக இனிமையான எதிரி என்று டி.ஆர்.பாலு கூறி யிருப்பது. ஸ்டாலினின் எண்ணமே டி.ஆர்.பாலுவின் பேச்சில் வெளிப்படுகிறது.
திமுகவினரின் ஏமாற்று வேலைக்கு சிறுபான்மை மக்கள் பலியாகி விடக் கூடாது. அண்ணா உருவாக்கிய திமுக, இன்று ஸ்டாலினின் குடும்பக் கட்சியாக மாறிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT