Published : 10 Aug 2019 10:11 AM
Last Updated : 10 Aug 2019 10:11 AM

கடத்தல்காரர்கள் துணிகரம்: பைக்கில் கடத்திய சிறுவனை பாதியில் இறக்கிவிட்டு தப்பினர்

சென்னை

பைக்கில் கடத்தப்பட்ட சிறுவன் தொடர்ந்து அழுததால் அவனை சாலை யோரம் விட்டுத் தப்பிய இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

அண்ணா சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யூ அருகே பைக்கில் 9 வயதுடைய சிறுவனுடன் சென்ற இளைஞர்கள் 2 பேர், திடீரென சிறுவனை மட்டும் நிர்கதியாக இறக்கிவிட்டு தப்பினர். இதைத் தொடர்ந்து சிறுவன் மட்டும் சாலையோரம் நின்று தொடர்ந்து அழுதுகொண்டு இருந்துள்ளான். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சிறுவனிடம் சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அந்த சிறுவன் திருவல்லிகேணியைச் சேர்ந்த முருக வேல் என்பவரது மகன் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சம்பந்தப் பட்ட சிறுவன் அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். கடத்தல் குறித்து ஜாம்பஜார் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 2 பேர் சிறுவனிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். பின்னர், அவனிடம் நைசாக பேசி பைக்கில் கடத்திச் சென்றுள்ளனர்.

ராயப்பேட்டை, பீட்டர்ஸ் சாலை, அண்ணா சாலை என சிறிது நேரம் பைக்கிலேயே சுற்றியபோது, சிறுவன் தொடர்ச்சியாக அழுதுள்ளான். இதனால், செய்வதறியாது தவித்த கடத்தல்காரர்கள், மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் சிறுவனை சாலை யோரம் இறங்கி விட்டு விட்டு தப்பியுள்ளனர். அவர்களை விரைவில் கைது செய்வோம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x