Last Updated : 09 Aug, 2019 01:39 PM

 

Published : 09 Aug 2019 01:39 PM
Last Updated : 09 Aug 2019 01:39 PM

கோவையில் தொடர்மழை: ஹெல்ப்லைன் எண்ணை அறிவித்தது மாநகராட்சி 

கோவை

கோவையில் நடப்பு தென்மேற்குப் பருவகால தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. இந்நிலையில் கோவையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

தொடர்மழையின் காரணமாக கோவை அவிநாசி சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளின் தாழ்வான பகுதிகள், உப்பிலிப்பாளையம் அண்ணா மேம்பாலம், லங்கா கார்னர் ரயில்வே பாலம், வடகோவை மேம்பாலம் உள்ளிட்டவற்றின் கீழ் மழைநீர் தேங்கியது. இதனால் மேற்கண்ட சாலைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர் மழையின் காரணமாக கோவை நேற்று ரயில் நிலைய வளாக பார்சல் பிரிவு கட்டிடம் இடிந்து 2 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று காலை மதுக்கரை அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரின் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் ஜார்ஜ் (65), ஆறுமுகம் (65) ஆகியோர் காயமடைந்தனர்.

மாநகராட்சி எல்லைக்குட்பட்ட செல்வபுரத்திலிருந்து பேரூர் செல்லும் சாலையில் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் தேங்கியது. அங்குள்ள போலீஸ் சோதனைச்சாவடி நீரில் மூழ்கியது. அந்த சாலையில் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. பேரூர் சாலை செல்வபுரம் எஸ்.ஏ கார்டன் குடியிருப்பு, முத்துசாமி காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

வேடப்பட்டி சாலையில் உள்ள நாகராஜபுரம் குளத்தில் சிக்கிய ஒருவரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். அதேபோல், உக்கடம் ஆத்துப்பாலம் சாலையில் உள்ள கரும்புக்கடை, ஆசாத் நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

படம்: ஜெ.மனோகரன்

கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் கூறும் போது, "மாநகர மக்கள், மழைநீர் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க 24 மணிநேரக் கட்டுப்பாட்டு மையம், மாநகராட்சி பிரதான அலுவலகம், மண்டல அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் தொடர்பான பாதிப்புகள் குறித்து மாநகரின் வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த மக்கள் 0422-2243133 என்ற எண்ணிலும், தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த மக்கள் 0422-2252482 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.

கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த மக்கள் 0422-2572696, 2577056 என்ற எண்ணிலும், மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த மக்கள் 0422-2551700 என்ற எண்ணிலும், மத்திய மண்டலத்தைச் சேர்ந்த மக்கள் 0422-2215618 என்ற எண்ணிலும் மற்றும் மாநகராட்சியின் 81900-00200 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலமாகவும், 74404-22422 என்ற எண்ணில் எஸ்எம்எஸ் மூலமாகவும் புகார் அளிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x