Published : 07 Aug 2019 11:06 AM
Last Updated : 07 Aug 2019 11:06 AM

திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு விடிய விடிய அசைவ அன்னதானம்: 1,200 ஆடுகள், 3,000 கோழிகள் காணிக்கை

மெகா அன்னதானத்துக்காக பெரிய பாத்திரங்களில் நறுக்கப்பட்ட காய்கறிகள்.

திண்டுக்கல்

திண்டுக்கல் முத்தழகுபட்டியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய விழாவின் முக்கிய நிகழ்வாக 1,200 ஆடுகள், 3,000 கோழிகள் காணிக்கையாக பெறப்பட்டு, அவற்றைக் கொண்டு நேற்று இரவு 7 மணிக்குத் தொடங்கிய அன்னதானம் விடிய விடிய நடந்தது.இதில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

முத்தழகுபட்டியில் பிரசித்தி பெற்ற புனித செபஸ்தியார் ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழா தொடக்கமாக ஆகஸ்ட் 4-ம் தேதி ஆலயம் முன் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, ஆகஸ்ட் 5-ம் தேதி புனிதர்களின் இரவு மின் தேர்பவனி நடைபெற்றது. விழாவில் நேற்று காலை திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி பங்கேற்ற சிறப்புத் திருப்பலி நடை பெற்றது.

தொடர்ந்து, புனித செபஸ்தியார் ஆலயத்துக்கு மக்கள் ஊர்வலமாக வந்து ஆடு, கோழிகளை காணிக்கையாகச் நேற்று செலுத்தினர். மாலை 5 மணி வரை பொதுமக்களிடம் ஆடு, கோழிகள் பெறப்பட்டன.

மொத்தம் 1200 ஆடுகள், 3000 கோழிகள் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக வரப்பெற்றன. பின்னர் இவற்றைக் கொண்டு உணவு சமைக்கும் பணி கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது.

சமையலுக்கு உதவிய மக்கள்

சமையலுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் பக்தர்கள் வழங்கியதுடன், சமையல் செய்யும் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சமையல் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். நேற்று இரவு 7 மணிக்கு மெகா அசைவ அன்னதானம் தொடங்கியது.

இன்று தேர்ப்பவனி

ஆடு, கோழிகளை காணிக்கை யாக வழங்கியவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காத்திருந்து அன்னதானத்தில் பங்கேற்றனர்.

இரவு முழுவதும் நடந்த மெகா அன்னதானம் அதிகாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது. இந்நிகழ்வில் பங்கேற்க, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகின்றனர்.

இன்று பகலில் தேர்பவனி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து சிறப்புத் திருப்பலி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x