Published : 07 Aug 2019 10:47 AM
Last Updated : 07 Aug 2019 10:47 AM
வி.சுந்தர்ராஜ்
தஞ்சாவூர்
தமிழர்களின் பாரம்பரிய கரகாட் டத்தை, குவைத் நாட்டை சேர்ந்த 7 வயது தமிழக சிறுமி ஒருவர் நுண்ணியமாக கற்றுக்கொண்டு ஆடி அசத்தி வருகிறார்.
கலைகளுக்குப் பெயர் போன தஞ்சாவூரில் பல கலைகள் அழியும் நிலையில் உள்ளன. அழிந்து வரும் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கரகாட்டம் கோயில் திருவிழாக்களிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் மட்டுமே தற்போது ஒரு சிலரால் ஆடப்பட்டு வருகிறது.
பரதநாட்டியம், மேலைநாட்டு நடனம் உள்ளிட்ட நடனங்களை பலரும் கற்றுக்கொள்ளும் நிலையில், கரகாட்டத்தைக் கற்றுக்கொள்ள அதிகம் ஆர்வம் காட்டாத நிலையில் திருவாரூரைச் சேர்ந்தவர்களும் குவைத் நாட்டில் ஓட்டல் நடத்தி வருபவர்களுமான பழனி- சரஸ்வதி ஆகியோரின் மகள் தனஸ்ரீ(7) கரகாட்டம் கற்றுக்கொண்டு ஆடி அசத்தி வருகிறார்.
குவைத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வரும் இவர், அந்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற குவைத் தமிழர் திருவிழாவில் கரகாட்டம் ஆடி பலரது பாராட்டையும் பெற்றார்.
கரகாட்டத்தில் மகளுக்கு ஆர்வம் உள்ளதை அறிந்த அவரது பெற்றோர்கள் பள்ளி விடுமுறை நாட்களில் தஞ்சாவூ ருக்கு அழைத்து வந்து, கலைமாமணி விருது பெற்ற ரெட்டிபாளையம் தேன்மொழி ராஜேந்திரன் என்பவரிடம் கடந்த 2 ஆண்டுகளாக கரகாட்டம் கற்றுக் கொடுத்து வருகின்றனர்.
பலகை, தட்டு, செம்பு ஆகியவற்றின் மீது நின்றபடி கரகாட்டம் ஆடும் தனஸ்ரீ, தற்போது ஒரு மாத விடுமுறையில் தஞ்சாவூருக்கு வந்து பயிற்சியைத் தொடர்ந்து வருகிறார்.
இதுகுறித்து சிறுமி தன கூறியபோது, “கரகாட்டக் கலையை திறம்படக் கற்றுக் கொண்டு, குவைத்தில் பலருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது என் விருப்பம். கரகாட்டத்தில் கின்னஸ் சாதனை புரிய வேண்டும் என்பது என் லட்சியம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT