Last Updated : 06 Aug, 2019 12:14 PM

 

Published : 06 Aug 2019 12:14 PM
Last Updated : 06 Aug 2019 12:14 PM

சக பயணியைக் குடிபோதையில் ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்தவர் கைது

விழுப்புரம் 

சக பயணியை ஓடும் ரயிலிலிருந்து  தள்ளிவிட்டுக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரது மகன் உமாநாத் (28). இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று தனது சொந்த ஊருக்கு ராக்போர்ட் விரைவு ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திண்டிவனம் அடுத்த பேரணி மேம்பாலம் அருகே ஒரு இளைஞரின் சடலம் ரயில் பாதை அருகே இருப்பதாக பெரியதச்சூர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து  போலீஸார் அந்த இளைஞரின் செல்போனில் இருந்து அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும், செங்கல்பட்டு இருப்புப்பாதை போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

இத்தகவலறிந்த இளைஞரின் உறவினர்கள் விரைந்து வந்து தனது மகனை அடையாளம் காண்பித்து உறுதி செய்தனர். இதனையடுத்து ரயிலில் இருந்து கீழே  விழுந்து இறந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

இந்த நிலையில் உமாநாத் உடன்  ரயிலில் தகராறில் ஈடுபட்ட  நபரை சக பயணிகள் ஐந்து பேர்  பிடித்து விழுப்புரம் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் உமாநாத்தை  அந்த இளைஞர் ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டதாகக் கூறி ஒப்படைத்துச் சென்றனர். இதன் அடிப்படையில் செங்கல்பட்டு இருப்புப்பாதை போலீஸார் வழக்குப்பதிவு செய்து மதுரையைச் சேர்ந்த முத்தரசன் என்பவரைக் கைது செய்தனர். 

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில். தான் குடிபோதையில் இருந்ததாகவும் அப்போது எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டபோது அவரைத் தள்ளினேன்.அவர் தவறி ரயிலில் இருந்து கீழே விழுந்து விட்டார் என போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x