Published : 05 Aug 2019 10:25 AM
Last Updated : 05 Aug 2019 10:25 AM

வேலூர் மக்களவைத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்; 7.40% வாக்குகள் பதிவு

வேலூர்

வேலூர் மக்களவைத் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி, 7.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வேலூர் மக்களவைத் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்ட தேர்தல் இன்று (5-ம் தேதி) காலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உட்பட 28 பேர் போட்டியிடுகின்றனர்.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை முன்னிட்டு 6 சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,553 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர் தொகுதியில் 1,553 வாக்குச்சாவடிகளில் 179 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, அங்கு பாதுகாப்பை பலப்படுத்த கூடுதல் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் பதற்றம் நிறைந்த பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 59 இடங்களில் துணை ராணுவத்தினர் ஆயுதங்களுடன் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வேலூர் மக்களவைத் தொகுதி முழுவதும் 3 ஆயிரத்து 957 தமிழக காவல் துறையினர், 1,600 துணை ராணுவத்தினர், 400 ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ வீரர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

வேலூர் தொகுதி மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பூத் ஸ்லிப் மட்டுமல்லாமல் வாக்காளர் அடையாள அட்டை,  ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட 12 அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி, 7.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, வேலூரில் 8.75%, அணைக்கட்டில் 6.1%, கே.வி.குப்பத்தில் 8.85%, குடியாத்தத்தில் 6.79%, வாணியம்பாடியில் 6.29%, ஆம்பூரில் 7.67% வாக்குகள் பதிவாகியுள்ளன.

செந்தில்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x