Published : 23 Jul 2015 10:29 AM
Last Updated : 23 Jul 2015 10:29 AM

ஏழாவது உலகம்: எங்கெங்கும் உலாவும் போலிகள்

உயர் ரக பிராண்டட் குளியல் சோப் ஒன்றை வாங்கி தேய்த்த பெண்மணி ஒருவர் அதில் வாசனை வராததையும் அது பிசுபிசுவென்று இருப்பதையும் கண்டு வாங்கிய கடையை தொடர்பு கொண்டார்.

அவர்கள் விநியோகஸ்தர்களைத் தொடர்பு கொண்டார்கள். அவர்கள் கம்பெனிக்காரர்களைத் தொடர்பு கொண்டார்கள். கம்பெனிக் காரர்கள் வந்து பார்த்து உதட்டைப் பிதுக்கிவிட்டு அந்த சோப் போலி கலப்பட சோப் என்பதை அறிவித்தார்கள்.

தரமான பெரிய கடையில் வாங்கிய சோப்புக்கே இந்த கதை என்றால், தரமில்லாத இடங்களில் விற்கப்படுபவை பற்றி கேட்கவே வேண்டியதில்லை. நுகர்வுப் பொருட்களின் தயாரிப்பாளர்கள் முன் நிற்கும் மிகப் பெரிய சவால் இந்த போலி கலப்பட சந்தைதான்.

அசோ சாம் புள்ளி விவரப்படி இந்த வகை போலி கலப்பட சந்தையால் ஆண்டுக்கு 2,600 கோடி ரூபாய் நிறுவனங்களுக்கு இழப்பு என கணக்கிடப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு இந்த இழப்பு 6,000 கோடி ரூபாயாக உயரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆட்டோ மொபைல் சந்தையில் மட்டும் போலி கலப்பட சந்தையால் ஆண்டுக்கு 14,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

சென்னை, பாரிமுனை நாராயண முதலி தெருவுக்குள் நுழைந்து, பத்தாயி ரம் சோப்புகள் வேண்டும் என்று கேட்டு பாருங்கள். அசியா (ஒரிஜினல்) அட்டா (டூப்ளிகேட்) என அடுத்த கேள்வி வந்து விழும். இப்படியான போலி கலப்பட பொருட்களின் குறி பெரும்பாலும் கிராமப்புற மக்கள்தான். இந்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சக புள்ளி விவரப்படி FMGC (Fast Moving Consumer Goods) பொருட் களில் 60 சதவீதம் கிராமப் புற விற்பனையையே சார்ந்து இருக்கின்றன. கிராமப்புறங்கள், சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றை குறிவைத்து இந்த போலி கலப்பட சந்தை இயங்குகிறது.

நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச் சியால், எந்த மாதிரி இயந்திரத்தையும் தயார் செய்துதர கோவையில் சில தொழிற்சாலைகள் தயா ராக இருக்கின்றன. கடந்த பத் தாண்டுகளாக இந்த தொழிலின் மையமாக புதுச்சேரி விளங்கு கிறது. மூலப் பொருட்கள் பஞ்சாப் உள்ளிட்ட இந்தியாவின் பிற பெருநகரங்களில் இருந்து சென்னைக்கு வந்து, இங்கு நவீனத் தொழில் நுட்பத்துடன் பேக்கிங் செய்யப்பட்டு கிராமப்புறங்களுக்கு அனுப்பப்படுகின்றன. பல பொருட் களின் மூலப் பொருட்கள் சென்னையிலேயேகூட இப்போது தயாராவதாக இந்த துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தனை பொருட்களிலும் போலி கலப்பட பொருட்கள் உலாவுகின் றன. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகர காவல் துறை, பிரபல நிறுவனம் ஒன்றின் பெய ரில் தயாரிக்கப்பட்ட, 500 போலி கேமராக்களைப் பறிமுதல் செய்தனர். பிரபல பிராண்டுகளின் விலையைவிட பாதிக்குப் பாதி குறைவாக கிடைப்பதால் பேராசை கொண்ட சில வியாபாரிகள் இவற்றை வாங்கி விற்கிறார்கள்.

பெரும்பாலும் காவல்துறை இதுபோன்ற பொருட்களை ஏற்றி போகும் லாரிகளை மறித்து அவர் கள் கொண்டுபோகும் பில்களை பரிசோதனை செய்வார்கள். போலி கலப்பட தொழில் செய்பவர் களுக்கு, போலி பில்களை தயாரிக் கவா சொல்லித்தர வேண்டும்? பெரும்பாலும் இப்படியான சோதனைகளில் பிடிபடுபவர்கள், அடிமட்டத் தொழிலாளிகளாகவே இருப்பார்கள். போலி கலப்பட வழக்கில் கைது செய்தாலும் அது ஜாமீனில் வெளிவரக் கூடிய (bailable) குற்றம் என்பதால், பல ருக்கு குளிர்விட்டுப் போய்விட்டது என்கிறார் பெயர் குறிப்பிட விரும் பாத காவல்துறை அதிகாரி ஒருவர்.

எத்தனை பேர் அந்த பெண் மணி போல, சோப்பை கையில் எடுத்து வந்து புகார் தெரிவிப்பார் கள் என்பதால், தங்குதடையின்றி இந்த போலி கலப்பட சந்தை இயங்குகிறது. அதனால்தான் பெரும்பாலும் அவர்கள் சுற்றுலாத் தலங்களைக் குறிவைக்கிறார்கள்.

யாரும் திரும்பி வந்து புகார் தெரிவிக்க மாட்டார்களே? பெரு நிறுவனங்கள் பல தங்கள் பிராண் டின் பெயரில் போலி வருகிறது என்பதை ஒப்புக்கொண்டால், தங்கள் விற்பனை பாதிப்படையும் என அஞ்சுகின்றன. பெருநிறுவனங் கள் ஒன்றிணைந்து உரியவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றால், இதை ஓரளவுக்கு தடுத்துவிட முடியும். விநியோக சங்கிலியிலும் ஓட்டைகள் இருப்பதை கம்பெனிகள் உணர வேண்டும்.

நுகர்வோர் கூடுமானவரை விலை குறைவாக கிடைக்கிறதே என்பதற்காக, தரம் குறைந்தவற்றை வாங்குவதை தவிர்க்க வேண்டும். எம்.ஆர்.பி விலையைவிட ஒரு 10 சதவீதம் குறைந்தால் சரி. முப்பது சதவீதம் குறைவாக கொடுத்தால் கேள்வி கேளுங்கள். வாங்கும் எல்லாப் பொருட்களுக்கும் பில் வாங்குங்கள். இதையெல்லாம் செய்தால் போலிகளின் நடமாட் டத்தை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.

கட்டுரையாளர்: சரவணன் சந்திரன், பத்திரிகையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு.saravanamcc@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x