Published : 01 Aug 2019 10:32 AM
Last Updated : 01 Aug 2019 10:32 AM

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை: ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் இனியும் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படக்கூடாது என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த 25 ஆம் தேதி அன்று ஒரு விசைப்படகில் சென்ற 4 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து  சிறையில் அடைத்துள்ளனர்.

அதே போல கடந்த 27 ஆம் தேதி அன்று ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் இருந்து சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் சுமார் 600 விசைப்படகுகளில் நடுக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை அச்சுறுத்தி, தாக்கி, துரத்தினர். அப்போது ஒரு விசைப்படகில் இருந்த 7 மீனவர்களை கைது செய்து சென்றனர்.

இப்படி கடந்த 25 மற்றும் 27 ஆகிய இரு நாட்களில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், அச்சுறுத்துவதும், கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறையில் அடைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழில் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படுவதால் மீனவக் குடும்பங்கள் அச்சத்தோடே வாழ்வதோடு, பொருளாதாரமின்றி பெரிதும் சிரமப்படுகின்றனர்.

மீனவர்களுக்கு மீன்பிடித் தொழில் தான் பொருளாதாரம் ஈட்டுவதற்கு வழி. இச்சூழலில் மத்திய அரசு மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நல்ல தீர்வு, சுமூகத் தீர்வு ஏற்படுத்தி தரவும் அதன் மூலம் இந்திய - இலங்கை இடையேயான நட்பு நல்ல முறையில் தொடரவும் இந்தியா - இலங்கையிடம் முக்கிய பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும்.

மேலும் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கும், இலங்கை கடற்படையினரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் சுமார் 167 படகுகளை ஒப்படைப்பதற்கும் இந்திய அரசு - இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

எனவே தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் இனியும் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படக்கூடாது என்பதை மிக முக்கிய கவனத்தில் கொண்டு அதற்காக அவசிய, அவசர முடிவுகளை எடுத்து செயல்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்", என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x