Published : 01 Aug 2019 09:59 AM
Last Updated : 01 Aug 2019 09:59 AM
பி.டி.ரவிச்சந்திரன்
கொடைக்கானல்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக் கானல் மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதைப் பெற 12 ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளைவிக்கப்படும் பூண்டு, மற்ற பூண்டுகளை போல் அல்லாமல் சாம்பல் நிறத்தில் காணப்படும். காரத்தன்மையும், மருத்துவக் குணங்களும் அதிகம். இந்த பூண்டு பத்து மாதம் வரை கெடாது. இந்த பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது குறித்து அன்னை தெரசா மகளிர் பல்கலை. உயிரி தொழில்நுட்பத்துறை தலைவர் உஷா ராஜநந்தினி கூறியதாவது:
கொடைக்கானல் மலைப் பூண்டின் மருத்துவக் குணம் குறித்து, நாங்கள் இரண்டரை ஆண்டுகளாக ஆய்வு செய்து தகுந்த ஆதாரங்களுடன் 2018 ஜூனில் விண்ணப்பித்தோம். 100 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக விளைவிக்கப் படும் விளை பொருட் களுக்குத் தான் புவிசார் குறியீடு பெறமுடியும்.
ஆங்கி லேயர் காலத்தில் 1837-ம் ஆண்டில் ‘மெட்ராஸ் ஜெர்னல் அண்ட் லிட்ரேச்சர் அண்டு சயின்ஸ்’ என்ற புத்தகத்தில் இருந்து வெள்ளைப் பூண்டு நூறு ஆண்டுகளுக்கு முன்பு பயிரிடப் பட்டதற்கான சான்று கிடைத் தது. அதையும் சேர்த்து 12 ஆவணங்களை சமர்ப்பித் தோம்.
தற்போது கொடைக் கானல் பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது விவசாயிகள் மட்டுமல் லாது அனைவரை யும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதையடுத்து தேவை அதிகரிப்பால் விவசாயிகளுக்கு நல்ல விலைகிடைக்கும்.
இந்திய அளவில் 734 வகையான பூண்டு வகைகள் உள்ளன. இதில் முதன்மையானது கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையும் மலைப்பூண்டு. இவ்வாறு அவர் கூறினார்.
கொடைக்கானலில் ஆயிரக் கணக்கான ஏக்கரில் மலைப்பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் அறுவடையான பூண்டுகளை இருப்பு வைக்க குளிர்சாதன கிட்டங்கி வசதி மலைப்பகுதியில் இல்லை.
மேலும் பூண்டுகளை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி சந்தைக்குத் தான் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இதற்கு விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவு அதிகம் ஆகிறது. இதனால் கொடைக்கானலில் பூண்டு மொத்த விற்பனை சந்தை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த தருணத்திலாவது மலை விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT