Published : 30 Jul 2019 05:07 PM
Last Updated : 30 Jul 2019 05:07 PM
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகும் கர்ப்பமானதால் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவுக்கு சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை அம்பாசமுத்திரம் அருகில் உள்ள ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்த ஷிபா ( 30), உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "திருவனந்தபுரம் தேயிலை தோட்டத்தில் என் தாயார் ரத்தினம் வேலை பார்த்து வந்தார். நான் அவருடன் வளர்ந்து வந்தேன். எனக்கு 13-வது வயதில் வலிப்பு நோய் ஏற்பட்டது. இதற்கு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றேன்.
இந்நிலையில் கடந்த 2010-ல் எனக்கு திருமணம் நடைபெற்றது. அடுத்த ஆண்டில் ஆண் குழந்தை பிறந்தது. 17.06.2014-ல் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. வலிப்பு நோய் இருப்பதால் நெல்லை அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். பின்னர் வலிப்பு நோய்க்கு தொடர்ந்து மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தேன்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மாதவிடாய் நின்றது. கேரளாவில் தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த போது நான் மீண்டும் கர்ப்பமடைந்திருப்பதாகவும், வயிற்றில் 17 வார கரு இருப்பதும் தெரியவந்தது.
குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகும் கர்ப்பமடைந்ததைக் கேட்டு நானும், குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தோம். இந்தக் கருவால் எனது உடல் நலனுக்கும், மன நலனுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் எனக்கு சரியாக குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யாத அரசு மருத்துவமனை மருத்துக்குழு மீது துறைரீதியான நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். மேலும், எனக்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் தரமான மருத்துவ சிகிச்சை வழங்கவும், ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர், நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT