Published : 29 Jul 2019 11:08 AM
Last Updated : 29 Jul 2019 11:08 AM

இன்று சர்வதேச புலிகள் தினம்: சுருங்கும் வனப் பரப்புகளால் நெருக்கடியை சந்திக்கின்றன

நாகர்கோவில்

சர்வதேச புலிகள் தினம் இன்று கடை பிடிக்கப்படும் நிலையில் தமிழக வனப் பகுதிகளில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. நாளுக்கு நாள் வனப்பரப்புகள் சுருங்குவதால் புலிகள் நெருக் கடியை எதிர்கொள்வதாகவும், இதை தவிர்க்க வனப்பகுதிகளை அழியாமல் பாதுகாக்க வேண்டும் எனவும், தேசிய புலிகள் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளை பாதுகாக்கவும், அவற்றின் எண்ணிக்கையை பெருக்கவும் உலக அளவில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்திய வனப்பகுதிகளில்தான் புலிகள் அதி கம் வாழ்கின்றன. அதேநேரம் வனப்பகுதிகள் சுருங்கி வருவதால் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் அவை புகும் சூழல் அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக நாகர்கோவிலை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் சாந்தி வசந்தமலர் கூறியதாவது: வனத்தில் புலி வாழ்கிறது என்றால், அங்கு அவற்றுக்கு தேவையான உணவு, தண்ணீர், பாதுகாப்பு, சுற்றித் திரிவதற்கான பரந்த இடம் இருக்கிறது என்பதை உணரலாம். புலிகள் வாழும் வனப்பகுதி செழுமை நிறைந்த காடுகள் இருப்பதற்கான அறிகுறி ஆகும்.

இந்தியாவில் அதிகம்

இந்தியாவில் 2010-ம் ஆண்டில் 1,706 புலிகள் இருந்தன. 2014-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட வனத் துறை கணக் கெடுப்பின்படி அவற்றின் எண்ணிக்கை 2,226 ஆக உயர்ந்தது. உலகில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கை 3,890 ஆகும். இந்தியாவில் உள்ள வனப்பகுதிகளில்தான் புலிகள் அதிகம் வசிக்கின்றன. புலிகளின் நடமாட்டம், அவற்றின் எண்ணிக்கை, வாழ்வியல் முறைகளை அறிந்துகொள்ளும் பொருட்டு வனங்களில் நவீன கேமராக்களை கடந்த 2018-ம் ஆண்டு இந்திய வன உயிரின நிறுவனம் நிறுவியது.

இந்தியாவில் அதிகபட்சமாக உத்தர காண்டில் 340 புலிகள் உள்ளன. கர்நாடகா, கேரள வனப்பகுதிகளும் புலிகள் வாழ்வதற்கு ஏற்ற இடங்களாகும். புலிகள் அதிகமாக வாழும் மாநிலங்களில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. 2014-ம் ஆண்டு வனத் துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில் தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் 229 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 2018-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளி விவரம் விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை 250-ஐ தாண்டியுள்ளதாக புலிகள் பாதுகாப்பு நிறுவனம் உறுதிசெய்துள்ளது.

தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, சத்தியமங்கலம், முதுமலை, ஆனைமலை ஆகிய வனப்பகுதிகளில் புலிகள் காப்பகம் செயல்பட்டு வருகின்றன. தமிழக வனப்பகுதிகளில் புள்ளிமான், கலைமான், காட்டெருமை அதிகளவில் இருப்பதால்தான், புலிகள் எண்ணிக்கை பெருகி வருகிறது.

வனப்பகுதிகளில் மனித நடமாட்டம் அதிகரித்தல், வனங்கள் சுருங்குதல் ஆகிய காரணங்களால் அடிக்கடி மனிதன் வாழும் பகுதிக்குள் புலிகள் புகுந்து கால்நடைகளை தாக்குகின்றன. இதனால் மனிதன், புலிகள் இடையே மோதல் ஏற்படுகிறது. நாளுக்கு நாள் வனப்பகுதிகள் சுருங்கி வரும் நிலையில் வசிப்பிடங்களின்றி புலிகள் நெருக்கடியை எதிர்கொள்கின்றன.

எனவே, வனப்பகுதிகளை அழியாமல் பாதுகாத்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என, தேசிய புலிகள் பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x