Published : 27 Jul 2019 12:17 PM
Last Updated : 27 Jul 2019 12:17 PM

‘ரேபிடோ பைக் டாக்ஸி’ செயலி முடக்கம் விவகாரம்: காவல் ஆணையர்  பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ரேபிடோ பைக் டாக்ஸி செயலியை தமிழகத்தில் மட்டுமே முடக்கியுள்ளதாக திருத்தம் கேட்டு அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கில்  தமிழக அரசின் விளக்கத்தைக் கேட்காமல் செயலி மீதான தடையை நீக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

ரேபிடோ பைக் டாக்ஸி  என்ற நிறுவனம் பைக் டாக்ஸியை சட்டவிரோதமாக தமிழகத்தில் வாடகைக்கு விட்டதாக புகார் எழுந்தது. தமிழகத்தில் மோட்டார் வாகனச் சட்டப்படி இருசக்கர வாகனம் மூலம் டாக்ஸி முறைக்கு  அனுமதி இல்லை. ஆனால் ரேபிடோ பைக் டாக்ஸி நிறுவனம் அனுமதியை மீறி தனியார் வாகனங்களையும் சட்டவிரோதமாக பைக் டாக்ஸி வாடகைக்குப் பயன்படுத்தியதால் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிறுவனத்தின் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் போன்றவற்றில் பொதுமக்கள் தரவிறக்கம் செய்யாமல் இருக்க அந்நிறுவனத்துக்குக் கடிதம் எழுதப்பட்டது. மோட்டார் வாகனச் சட்டப்படி சொந்த வாகனத்தை வாடகை சேவைக்காகப் பயன்படுத்தக் கூடாது என்பதாலும் இருசக்கர வாகனத்தை வாடகை சேவைக்குப் பயன்படுத்த இன்னும் விதிமுறை இயற்றப்படாததாலும், ரேபிடோ பைக் ஆப்- ஐ கூகுள் மற்றும் ஆப்பிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்குமாறும் அதன் இணையதளத்தை முடக்குமாறும் சென்னை மாநகர காவல் ஆணையர்  உத்தரவிட்டார்.

மாநகர ஆணையர் உத்தரவை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், இருசக்கர வாகன பின் இருக்கையை வாடகைக்குப் பயன்படுத்துவதற்கு தமிழக அரசு விதிகளை உருவாக்கும்  வரை, ரேபிடோவை அனுமதிக்க முடியாது எனக் கூறி தமிழக அரசின் தடையை நீக்க மறுத்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து  ரேபிடோ நிறுவனம் தொடர்ந்த மேல் முறையீட்டு  வழக்கு, அவசர வழக்காக நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

அப்போது ரேபிடோ நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “தனி நீதிபதியின் உத்தரவில் மற்ற மாநிலங்களில் செயல்படுவது தொடர்பாக எந்தக் கருத்தும் தெரிவிக்காத நிலையில், ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி மற்ற மாநிலங்களிலும் செயல்பட  முடியாத வகையில் ஒத்துழைக்க மறுக்கின்றன,  தனி நீதிபதி உத்தரவில் திருத்தம் செய்து தமிழ்நாட்டிற்கு மற்றும் தடை பொருந்தும் எனத் தெரிவிக்க வேண்டும்” என வாதிட்டார்.

இதையடுத்து, தமிழக அரசின் விளக்கத்தைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்கு மாநகர காவல் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு  விசாரணையை ஆகஸ்ட் 1- ம் தேதிக்கு வழக்கைத் தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x