Published : 25 Jul 2019 03:52 PM
Last Updated : 25 Jul 2019 03:52 PM

கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் இரண்டு குட்டிகளுடன் உலா வந்த கரடி

கோத்தகிரி 

கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் இரண்டு குட்டிகளுடன் தாய்க் கரடி ஒன்று உலா வருவதை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னுார் மற்றும் கோத்தகிரி பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குன்னுாரிலிருந்து அரவேணு செல்லும் சாலையில் அளக்கரை பகுதி சாலையில் கடந்த சில நாட்களாக இரண்டு குட்டிகளுடன் தாய்க் கரடி ஒன்று அவ்வப்போது, குட்டிகளுடன் விளையாடியும் குட்டிகளை முதுகில் சுமந்தும் வலம் வந்தது.

இந்நிலையில், அதே பகுதியில் மீண்டும் இரண்டு குட்டிகளுடன் தாய்க் கரடி இன்று (வியாழக்கிழமை) அங்குள்ள தேயிலைத் தோட்டத்திற்குள் வந்தது. அதில் ஒரு குட்டி, தாயின் முதுகிலும், மற்றொரு குட்டி தாயின் பின்னால் பிடித்துக்கொண்டும் உலா வந்தன. இக்காட்சியைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை நிறுத்தி ஆர்வத்துடன் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர்.

இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறும் போது, "இதுபோன்ற காட்சிகளைக் காண்பது அபூர்வம்" என்றனர். மேலும், அப்பகுதியில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கரடியைக் கண்டு எந்தவித அச்சமும் இன்றி தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x