Published : 22 Jul 2019 01:38 PM
Last Updated : 22 Jul 2019 01:38 PM
தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை குலவைப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியை செளபாக்கியவதி, தன் மீதான துறை ரீதியான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் இன்று (திங்கள் கிழமை) பிறப்பித்த உத்தரவில், "அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக சோதனை செய்ய வேண்டும். மாணவர்களின் அறிவுத் திறனை வளர்க்கும் வகையில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் சிறப்பானதாகவும், பொறுப்புணர்வு கொண்டாதாகவும் இருக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர் சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும். இந்தக் குழுவானது, ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆய்வு செய்ய வேண்டும்.
ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதிக்க நிபுணர் குழுக்களின் அறிவுறுத்தலின் பேரில் கல்விக் கொள்கையின் அடிப்படையில் வினாவிடை தொகுப்பை உருவாக்க வேண்டும். அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாற்றம் செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT