Published : 18 Jul 2019 03:20 PM
Last Updated : 18 Jul 2019 03:20 PM

வைகோவுக்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

வைகோ: கோப்புப்படம்

வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை ராணி சீதை மன்றத்தில் நடைபெற்ற 'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார். அதில் மத்திய, மாநில அரசுகள் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் துரோகம் செய்து விட்டதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக, வைகோ மீது தேசத் துரோகம் மற்றும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. 

வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, வைகோவுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும்,10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டார், வைகோ தரப்பில் முறையீடு செய்யப்பட்டதால் 4 வாரங்களுக்கு தண்டனையை நீதிபதி நிறுத்தி வைத்தார். 

இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தார்.

அதில், "நான் பேசியதாகக் கூறப்படும் 2009 ஜூலை மாதத்தில் இருந்து சுமார் 146 நாட்களுக்குப் பிறகு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை 29 மணி நேரத்திற்குள் நீதிபதியிடம் சமர்ப்பிக்காமல் 56 மணி நேரத்திற்குப் பிறகு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. காலதாமதத்துடன் பதிவு செய்யப்படும் முதல் தகவலை அறிக்கை உள்நோக்கம் கொண்டதாகவே அமையும் என உச்ச நீதிமன்றம் தனது பல தீர்ப்புகளில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. 

தேசத் துரோக வழக்கில் என் மீது 9 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் குற்றச்சாட்டுப் பதிவு நடைமுறைகள் செய்யப்பட்டன. இந்திய அரசுக்கோ, மாநில அரசுக்கோ எதிராகவும், நாட்டுக்கு எதிராக கலவரத்தையோ, மாநிலத்தைப் பிரிக்கும் வகையிலோ பேசினால் மட்டுமே தேசத் துரோக வழக்கைப் பதிவு செய்ய முடியும். ஆனால் எந்த இடத்திலும் அரசுக்கு எதிராக நான் பேசவில்லை என்று சாட்சிகள் விசாரணையில் தெளிவுபடுத்தியுள்ளன. 

புத்தக வெளியீட்டில் கலந்துகொண்ட 700 பேரில் ஒருவரிடமும் விசாரணை நடத்தவில்லை. பேச்சுகள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதையும் விசாரணை அதிகாரிகள் ஆதாரமாக எடுத்துக்கொள்ளவில்லை. நீதிபதியின் உத்தரவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்த 2 மாதத்திற்குப் பின்னர் வைகோ பேசியதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது, மத்திய, மாநில அரசுக்கு எதிராக மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக தடா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அறிக்கையில் தற்போது வரை பிரபாகரன் தலைமறைவாக மட்டுமே உள்ளார் என இந்திய அரசு அறிக்கை தாக்கல் செய்து வருகிறது. எனவே,மேலே குறிப்பிட்ட குறைபாடுகள் அடிப்படையில், போதுமான ஆதாரங்கள் இல்லாமல், சிறப்பு நீதிமன்றம் தனக்கு வழங்கிய சிறை தண்டனையை  ரத்து செய்ய வேண்டும்" என வைகோ தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு இன்று (வியாழக்கிழமை) நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x