Published : 20 Jul 2015 10:40 AM
Last Updated : 20 Jul 2015 10:40 AM

ஏழாவது உலகம்: போதையில் தள்ளாடும் மருந்துச் சீட்டுகள்

எண்ணூர் துறைமுகத்துக்குப் பின் புறம் இருக்கிற வெட்டவெளிக்கு நண்பர் அழைத்துச் சென்றார். வழியில் இரண்டு புறமும் நவநாகரீககார்கள் அணிவகுத்து நின்றிருந்தன. சில ஸ்கூட்டிகள்கூடத் தென்பட்டன. பார்த்தவுடனேயே அது ஒரு மறைவுப் பிரதேசம், மறைவான காரியங்கள் நடைபெறும் இடம் எனத் தெரிந்தது. ஆங்காங்கே அமர்ந்து இளைஞர்களும், இளைஞர்களின் பாதுகாப்போடு வந்திருந்த இளைஞிகளும் கைகளில் ஊசி குத்திக் கொண்டிருந்தார்கள்.

அவர்களிடையே மருந்து அட்டைகள் நிறைய இருந்தன. ஒரு காட்சி நிலைகுலைய வைத்தது. இளைஞர் ஒருவர் தனது ஆணுறுப்பில் ஊசியைப் போட்டுக்கொண்டார்.

இவை போதை ஊசிகளில்லை. அத்தனையும் மருத்துவர்களால் வெவ்வேறு பிரச்சினைகளுக்காகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் என்றார் நண்பர். பிரசவ காலங்களில் தரப்படும் மருந்துகள், மன நல மருந்துகள், அதிஉயர் வலி நிவாரணிகள், இருமல் மருந்துகள், தூக்கத்தை உண்டு பண்ணும் மருந்துகள், அறுவை சிகிச் சையின்போது தரப்படும் மயக்க மருந்துகள் ஆகியவற்றை மருத்துவர்கள் பரிந்துரைக்காத நிலையில் அனுமதியில்லாமல் கள்ளத்தனமாக போதைக்காகப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்திருப்பதாகச் சொன்னார் அந்த நண்பர்.

எதற்காக இந்த விபரீத விளையாட்டில் ஈடுபடுகிறார்கள் என்பதை ஆராய்ந்தால் பல அதிர்ச்சிதரும் விஷயங்கள் இதற்குள் ஒளிந்திருக்கின்றன.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், இது போன்ற மருந்துகளைப் போதைக்காக உட்கொள்ளும் நபர் பின்னர் அதற்கு அடிமையாகிவிடுகிறார். ஒரே நபர் அவரது உடல்தகுதிக்கேற்ப 10-க்கும் மேற்பட்ட வலி நிவாரண மாத்திரிகளை உட்கொண்டால், அது போதைக்கு நிகரானதாக இருக்கும் என்கின்றனர். கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மொத்த மருந்துக் கம்பெனிகளில் இருந்து கடத்திவரப்படும் இது போன்ற மருந்துகள், அதிக விலைக்குச் சென்னை போன்ற நகரங்களில் விற்கப்படுகின்றன.

பெரும்பாலான மருந்துக் கடைகள் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளைத் தருவதில்லை. ஆனாலும் பணத்துக்கு ஆசைப்படும் சிலர் இது போன்ற மருந்துகளைத் தருவதாகச் சொல்கிறார்கள். தவிர போதைக்கு அடிமையானவர்கள் போலி மருந்துச் சீட்டுகளை அச்சடித்து மருந்துக்கடைகளை ஏமாற்றுவதும் நடைபெறுகிறது.

போதைக்கு அடிமையானவர்களை பெரும்பாலும் கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் இதில் உள்ள சோகம்.

ஆல்கஹால் அருந்தியிருந்தால், வாடை காட்டிக் கொடுத்துவிடும். இதுபோன்ற மருந்துகளை எடுப் பவர்களை வெளித் தோற்றத்தை வைத்து கண்டுபிடிக்க முடியாது. அவர்களது பதற்றம், மனச் சோர்வு இவற்றை வைத்துத்தான் அவர்கள் வேறுமாதிரியான போதையில் நீந்துகிறார்கள் என்பதையே அறிய முடியும். ஆல்கஹால் போன்ற போதைகளில் இருந்துகூட ஒருவரை கொஞ்சம் கஷ்டப்பட்டாவது வெளியே கொண்டுவந்துவிடலாம். ஆனால் இந்த வகை போதையில் சிக்கிக் கொண்டவர்களை வெளியே மீட்பதற்கு அதிக ஆண்டுகள் பிடிக்கும் என்று இந்தத் துறையில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.

மீட்பது கடினம்

“என்னிடம் மட்டுமே இதுவரை 8,000 பேர் சிகிச்சைக்கு வந்திருக்கின்றனர். அதிலிருந்து 60 சதவீதம் பேரை மட்டுமே மீட்க முடிந்தது. மாதத்துக்கு 3 பெண்களாவது இந்த மருந்துகள் உட்கொண்டு போதையில் சிக்கிச் சீரழிந்து சிகிச்சைக்காக வருகின்றனர். பெரும்பாலும் இளைஞர்கள்தான் இதில் சிக்கியிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் எந்த விலைகொடுத் தாவது அதை வாங்க வேண்டும் என்கிற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்த போதைக்கு ஆட்பட்ட பிறகு, வேறு எந்த போதையையும் நாடுவதில்லை என்பதால் அதிக விலை என்பது அவர்களுக்குப் பொருட்டே இல்லை” என்கிறார் ‘ப்ரீடம் கேர்’ போதை மறுவாழ்வு மையம் நடத்தி வரும் கே.என்.வரதன்.

தொடர்ந்து இந்த வகை மருந்துகளை போதைக்காக உட் கொண்டு வந்தால், நரம்பு மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்படும். உச்சகட்டமாக இதயச் செயலிழப்பு கூட ஏற்படலாம். அவர்கள் எப்போதும் நிகழ்காலத்தில் இருந்து துண்டிக்கப்பட்டவர்களாக நடந்து கொள்வார்கள்.

பதற்றம் என்கிற உணர்வு எப் போதும் அவர்களது தனிச் சொத் தாக இருக்கும். போதை கிடைக் காமல் போனதற்காகச் சிலர் தற்கொலைகூட செய்து கொண்டி ருக்கின்றனர் என்கிறார் வரதன்.

மரணத்தின் வாசலில்

தொடர்ந்து ஊசிகளை மாற்றி மாற்றிக் குத்திக்கொள்வதால் ஹெப்படைட்டிஸ் பி, பால்வினை நோய்கள் ஆகியவையும் உருவா கின்றன. இந்த விபரீதச் சுழலில் மாட்டிக்கொண்ட பெண்களின் கதைகள் பரிதாபமானவை. செவி லியர் தொழிலில் இருந்த பெண் ஒருவர் எதேச்சையாக இந்த போதைச் சுழலில் மாட்டிக்கொண்டு மரணத்தை முத்தமிட்டிருக்கிறார். உடலின் மறைவுப் பகுதியில் ஊசிப் போட்டுக் கொண்டவரின் கதியும் அதுதான்.

உங்களுக்கு நெருக்கமான வட்டத்தில் யாரேனும் தேவைக்கு அதிகமாக மாத்திரை அட்டை களையோ, ஊசி மருந்துகளையோ வைத்திருந்தால், உஷாராகிவிடுங் கள். அவர் இத்தகைய சுழலில் சிக்கியிருக்கலாம். அவரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை நாம்தான் எடுக்க வேண்டும்.

கட்டுரையாளர்:சரவணன் சந்திரன், பத்திரிகையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு. saravanamcc@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x