Last Updated : 19 Jul, 2015 10:35 AM

 

Published : 19 Jul 2015 10:35 AM
Last Updated : 19 Jul 2015 10:35 AM

ஒரு மாதத்தில் 130 வீடுகளில் கைவரிசை: சென்னையில் அதிகரிக்கும் திருட்டுகள் - வெளியூர் செல்ல பொதுமக்கள் அச்சம்

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 130 வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. அதிகரித்து வரும் திருட்டை தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டை கொத்தவால்சாவடி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராஜகோபால். ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு ராஜகோ பால் குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டார். மாலையில் திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம், 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சைதாப்பேட்டை கவரைத் தெருவில் அடுக்குமாடி குடியி ருப்பில் வசிப்பவர் ஜோசப் லாரன்ஸ். மென்பொருள் பொறியாளரான இவர், வீட்டருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது வீட்டிலும் 2 நாட்களுக்கு முன்பு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 16 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் சைதாப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதம்பாக்கம் நிலமங்கை நகர் அவ்வையார் தெருவில் வசிக்கும் முரளி (49) என்பவரின் வீட்டில் ஒரு மாதத்துக்கு முன்பு 39 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் பணம் திருடப்பட்டது. முரளியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கோவிந்தராஜ், பிரகாஷ் ஆகியோரின் வீடுகளிலும் திருட்டு முயற்சி நடந்தது. ஆதம் பாக்கம் மகாலட்சுமி நகரில் ஒரு வீட்டில் 30 பவுன் நகைகள் திருடப்பட்டன.

ஆதம்பாக்கத்தில் தொடர்ச் சியாக திருட்டு சம்பவங்கள் நடக் கின்றன. ஆனால், எந்த வழக்கிலும் திருடர்கள் பிடிபடவில்லை. அதைத் தொடர்ந்து இப்போது சைதாப் பேட்டை பகுதிகளில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன.

வடநாட்டு கும்பலா?

திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற அனைத்து இடங்களிலும் அடுத் தடுத்த வீடுகளில், அதிலும் ஆளில்லாத வீடுகளை குறிவைத்து திருடியுள்ளனர். திருட்டு நடக்கும் விதம் அனைத்தும் ஒரே விதமாக இருப்பதால் அத்தனை திருட்டு களையும் ஒரே கும்பல் திட்டமிட்டு செய்து வருவதாக போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

ஒரே நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளில் திருடும் பழக்கம், வடநாட்டை சேர்ந்த கும்பலுக்கு உண்டு. தமிழகம் வந்து தங்கி, சில நாட்கள் திருடிவிட்டு,அதில் கிடைக்கும் நகை, பணம் மற்றும் பொருட்களுடன் சொந்த மாநிலங்களுக்கு சென்றுவிடுவர். சென்னை மாநகரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 130 வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் சுமார் 500 பவுன் நகைகள், ரூ.30 லட்சம் பணம் மற்றும் பொருட்கள் திருடப் பட்டுள்ளன. பெரும்பாலான திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகள் பிடிபடவில்லை. அவர்களைப் பிடிக்க போலீஸாரும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இதனால், வீடுகளைப் பூட்டி விட்டு வெளியூர் செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். ரோந்துப் பணியை அதிகரித்திருப் பதாக போலீஸார் கூறினாலும், திருட்டு சம்பவங்கள் குறைந்ததாக தெரியவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x