Published : 03 Jul 2015 01:36 PM
Last Updated : 03 Jul 2015 01:36 PM

பாலூட்டும் தாய்மார்களுக்கு பேருந்து நிலையங்களில் தனி அறைகள்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

தமிழகத்திலுள்ள முக்கியப் பேருந்து நிலையங்களில், பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "பச்சிளம் குழந்தைகளுக்கு பிறந்த ஒரு மணி நேரத்திலிருந்து ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்கப்பட வேண்டும் என்பது உலகெங்கும் மருத்துவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும். எனவே தான், 1990 ஆம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டு உலக தாய்ப்பால் ஊட்டும் வாரம் என்பது ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

போதிய அளவு தாய்ப்பால் இல்லாத மகளிரின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்கப் பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஒரு முன்னோடித் திட்டமாக கடந்த ஆண்டு சிறார் நல நிலையம் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் 'தாய்ப்பால் வங்கி' என்னும் திட்டம் எனது உத்தரவின் பேரில் துவங்கப்பட்டது. பணிபுரியும் மகளிர் தாய்ப்பால் ஊட்டுவதில் உள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு ‘Breastfeeding and Work-Let’s Make it Work’ என்ற கருப்பொருள் இந்த ஆண்டைய உலக தாய்ப்பால் ஊட்டும் வாரத்தில் கடைபிடிக்கப்படுகிறது.

அதாவது, தாய்ப்பால் ஊட்டுவதில் பணிபுரியும் மகளிருக்கு உள்ள இடர்பாடுகளைகளையும் வகையிலான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு தாய்ப்பால் ஊட்டும் அன்னையருக்கு அதற்கான வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது எனது அவா ஆகும்.

பாலூட்டும் தாய்மார்கள் பணி மற்றும் பயணம் நிமித்தமாக வெளியே செல்லும் போது பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டியுள்ளது. தங்கள் இருப்பிடத்திலிருந்து பணி இடத்திற்கோ அல்லது தாங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கோ செல்ல சில மணி நேரங்கள் தேவைப்படும்.

எனவே, பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளைகளில் அன்னையர் தங்கள் குழந்தைகளுக்கு தனிமையில் வசதியாக பாலூட்டும் வகையில் அரசு பேருந்து முனையங்கள் (bus terminals) நகராட்சி மற்றும் நகர பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து பணிமனைகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் அமைக்க நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த புதிய திட்டம் இந்த ஆண்டு உலக தாய்ப்பால் ஊட்டும் வாரமான ஆகஸ்டு மாதம் 1 ஆம் நாள் துவங்கப்படும்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x