Published : 09 Jul 2015 07:50 AM
Last Updated : 09 Jul 2015 07:50 AM

சிறுவர்களை இழிவுபடுத்தும் வீடியோ, புகைப்படங்களை பரப்புவோர் மீது நடவடிக்கை தேவை: குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கோரிக்கை

சிறுவர்களை இழிவுபடுத்தும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்புவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒருவர் தனது நண்பர்களு டன் சேர்ந்து 4 வயது சிறுவனை குடிக்கவைத்து ரசிக்கும் காட்சி சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ் அப், ஃபேஸ் புக் ஆகிய சமூக ஊடகங்களில் வெளியானது. இந்தக் காட்சியை வைத்து இதில் தொடர்புடைய சிலரை போலீஸார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மற்றொரு சிறுவனுக்கு மதுவைக் கொடுத்து ரசிக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினரான வழக்கறிஞர் ஜெயந்தி ராணி ’தி இந்து’விடம் கூறியதாவது:

18 வயது நிறைவடையாத சிறார்களைப் பற்றிய அடையா ளம் தெரியக்கூடிய படங்கள், வீடியோக்களை வெளியிடுவது குற்றம். அப்படி வெளியிடுவோ ருக்கு இளைஞர் நீதிச் சட்டம் 2000 (திருத்தப்பட்டது 2006) பிரிவு 21-ன் படி ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதை உணராமல் பலர் இந்த குற்றச் செயலை செய்கின்றனர். சிறார்களை இழிவு படுத்தும் வீடியோ காட்சிகள், புகைப்படங்களை காட்சிப்படுத் தும் நபர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயக்குமார் ’தி இந்து’விடம் கூறும்போது, “சிறார்களைப் பற்றிய இதுபோன்ற படங்கள், வீடியோக்களை வெளியிடுவது சட்டப்படி குற்றம். சிறார்களை இழிவுபடுத்தும் இதுபோன்ற தகவல்கள் தெரியவந்தால் அதை சமூக ஊடகங்களில் உலவ விடாமல் சைல்ட் லைன் அல்லது காவல்துறையினருக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க உதவுங்கள். அப்படி செய்யாமல் சமூக ஊடகங்களில் காட்சிகளை பரப்பும் நபர் குற்றவாளியாக கருதி தண்டிக்கப்படுவார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x