Last Updated : 06 Jul, 2015 12:34 PM

 

Published : 06 Jul 2015 12:34 PM
Last Updated : 06 Jul 2015 12:34 PM

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு

வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விசாரித்தார். அவர் கடந்த மே 11-ம் தேதி அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் அரசு தரப்பு என்ற முறையில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் கடந்த மாதம் 23-ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில், சொத்து விவரங்களை கணக்கிட்டதில் தவறு நடந்துள்ளது என்றும் கர்நாடக அரசின் வாதம் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

2,300 பக்கங்கள்

இந்நிலையில் திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செய லாளர் க.அன்பழகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட் டுள்ளது. மொத்தம் எட்டு புத்தகங்களாக 2300 பக்கங் களில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இம்மனுவில், ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி கணக்கிட்டதில் தவறு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தீர்ப்புக்கு இடைக் கால தடை விதிப்பதுடன் தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய லெக்ஸ் பிராபர்டீஸ் உள்ளிட்ட ஏழு நிறுவனங்களை விடுவித்ததை எதிர்த்தும் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக அரசின் மேல்முறையீடு, திமுக மனு ஆகியவை ஒரே வழக்காக இணைக்கப்பட்டு அடுத்தவாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x