Published : 22 Jul 2015 10:27 AM
Last Updated : 22 Jul 2015 10:27 AM

ஏழாவது உலகம்: மருந்து குப்பிகளுக்குள் நம்பிக்கை துரோகங்கள்

காசநோய்க்காக தொடர்ந்து மாத்திரைகளை உட்கொள்பவர் அவர். ஒரு நாள் தற்செயலாக தனக்குக் கொடுக்கப்பட்ட மாத்திரை கேப்சூல் ஒன்றை திறந்து பார்க்கிறார். அதனுள் மருந்து எதுவும் இல்லை. கேப்சூல் காலியாக இருக்கிறது.

மருந்து விஷயத்தில் நோயாளி கள் ஏமாற்றப்படும் மோசடியின் ஒரு சாம்பிள்தான் இது. மருத்துவர்கள், நோயாளிகள் என இரண்டு தரப்பினர் கண்களிலும் மண்ணைத் தூவும் ஒரு போலி அல்லது தரமற்ற மருந்துச் சந்தை ஒன்று அசுர பலத்துடன் இயங்கிவருகிறது.

1 லட்சம் பேர் உயிரிழப்பு

தரமற்ற மருந்துகள் பிடிபட்டன என்றெல்லாம் செய்தித் தாள்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் அது மருந்து சந்தைக்கு நிகரான பெரிய சந்தை.

ஒட்டுமொத்த உலக மருந்து சந்தை மதிப்பில் 20 சதவீதம் போலிச் சந்தை பங்கு என புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஆண்டுக்கு 1 லட்சம் பேர் இதுபோன்ற தரமற்ற மருந்துகளை உட்கொள்வதால் உயிரிழப்பதாகவும் சொல்லப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி இந்த 20 சதவீத சந்தையில், 75 சதவீதம் இந்தியாவில் இருந்து தயாராகும் போலி மருந்துகள்.

சமீபத்தில் ஒரு பெரிய கப்பல் கண்டெய்னர் முழுக்கத் தரமற்ற போலி மருந்துகளுடன் நைஜீரியாவுக்குள் நுழைந்த கப்பலைத் தடுத்து நிறுத்தி விசாரித்ததில் அது இந்தியாவில் இருந்து வந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் ‘ஏற்றுமதி’ செய்யப்படுவதோடு, உள்நாட்டுச் சந்தையிலும் புழங்குகின்றன. காசநோய்க்கான மாத்திரைகளை உண்ட அந்த நபர் தன்னிடமிருந்த ஐம்பது மருந்துகள் அடங்கிய அட்டையைப் பரிசோதித்தபோது, அதில் 5 கேப்சூல்கள் மருந்து ஏதும் அடைக்கப்படாமல் வெறுமையாக இருந்தன. இந்திய மருந்துக் கட்டுப்பாடு அமைப்பின் கடந்த ஆண்டு ஆய்வின்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மருந்துகளில் 180 வகைகள் போலியானவை என்று கண்டறியப்பட்டன. மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு, இந்தப் போலிச் சந்தை சாம்ராஜ்ஜியம் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதாக இந்த துறை சார்ந்த வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

கல்லீரல் பாதிக்கப்படும்

ஒரு மருந்தின் வீரியத்தில் 10 சதவீதம் வெயில் பட்டோ, காற்று பட்டோ குறையலாம் என்கின்றனர். ஆனால் மருந்தில் இருக்க வேண்டிய வீரியத்தில் 40 சதவீதம்தான் இருக்கிறது என்றால் அதுதான் போலி அல்லது தரமற்ற மருந்து. மருந்து சாப்பிட்டும் காய்ச்சல் குறையாது. அது மட்டும் பிரச்சினை அல்ல. பல மருந்துகள் கரையாமல் நம் கல்லீரலைப் பதம் பார்த்துவிடும். காய்ச்சல் மருந்துகளை தயாரிக்க உதவும் பாரசிட்டமால் என்ற வேதிப் பொருளையே எடுத்துக் கொள்வோம். பாரசிட்டமாலின் விலை கிலோ 1000 ரூபாய் என்று வைத்துக்கொண்டால், போலிச் சந்தையில் கிலோ 150 ரூபாய்க்குக்கூட அவை கிடைக்கின்றன.

போலி மருந்துகள்

இதுபோல் சல்லிசாகக் கிடைக் கும் தரமற்ற மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுபவையே தரமற்ற அல்லது போலி மருந்துகள் ஆகும்.

பல நேரங்களில் மருந்து கடைக் காரர்களுக்குத் தெரியாமலும், சில நேரங்களில் தெரிந்தும் இவை நோயாளிகளுடைய வீட்டினுள் நுழைகின்றன. சென்னை பாரீஸ் பகுதியிலுள்ள புகழ்பெற்ற அந்தத் தெருவுக்குள் நீங்கள் வெளிநாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்யும் ஆர்டரை கையில் வைத்திருப்பவர்போல நுழைந்து பாருங்கள். உள்ளூர் கம்பெனியிலிருந்து உலக கம்பெனி வரையிலான தயாரிப்புகளை இங்கேயே தயாரித்துத் தர ஆட்கள் இருக்கிறார்கள்.

உண்மையான கம்பெனி செய்யும் பேக்கிங் தொழில்நுட்பத்தை அப்படியே அச்சு அசலாய் பிரதியெடுத்து அடித்துத் தருவார்கள். நாம் எதிர்பார்க்கிற விலையை மட்டும் சொன்னால் போதும், அதற்கு தகுந்த தரத்தில் மருந்துகளைப் போலியாக உற்பத்தி செய்துதரத் தயாராகவே இருப்பார்கள்.

இது விபரீதம் என்று தெரிந்துவிட்டது. இதிலிருந்து தப்பிக்க என்னதான் செய்வது? தரமான மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தரமான மருந்துக் கடைகளில் வாங்குங்கள். மருந்து அட்டைகளில் இருக்கும் தேதி மாதம் இவற்றைப் பரிசோதியுங்கள். அதில் சந்தேகம் இருப்பின் மருத்துவர்களிடம் சென்று காண்பியுங்கள்.

அரசு இந்த விஷயத்தில் தலையிட்டுத் தீர்வுகாணும்வரை நமது விழிப்புணர்வு மட்டுமே நம்மைக் காக்கும்.

கட்டுரையாளர்: சரவணன் சந்திரன், பத்திரிகையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு. saravanamcc@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x