Published : 03 Jul 2015 08:17 PM
Last Updated : 03 Jul 2015 08:17 PM

முழுமை பெறாத மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அதிமுகவும், திமுகவும் சண்டை போடுவதா? - அன்புமணி

முழுமை பெறாத மெட்ரோ ரயில் திட்டத்துக்கு யார் காரணம் என அதிமுகவும், திமுகவும் சண்டையிட்டுக் கொள்வது பெற்றெடுக்காத பிள்ளைக்கு பெயர் சூட்டுவதற்கு அடித்துக் கொள்ளும் செயலுக்கு இணையானதாகவே மக்களால் பார்க்கப்படும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை நீண்ட தாமதத்திற்குப் பிறகு தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில் இத்திட்டத்திற்கு யார் காரணம் என்பது பற்றி அதிமுக- திமுக இடையே நடைபெறும் மோதல் மக்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டதை மிகப்பெரிய சாதனையாக காட்டி, அதற்குத் தாங்கள் தான் காரணம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக திமுகவும், அதிமுகவும் முட்டி மோதிக்கொள்வது நாகரீகமான அரசியலாகத் தோன்றவில்லை.

உண்மையில் சென்னை மெட்ரோ ரயில் சேவை என்பது ஒரு சாதனையே இல்லை... அது தாமதத்தின் அடையாளம். இச்சேவை இங்கிலாந்தின் லண்டன் நகரிலும், அமெரிக்காவின் நியூயார்க் நகரிலும் 152 ஆண்டுகளுக்கு முன் 1863 ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. லண்டனில் 270 நிலையங்களுடன் 402 கி.மீட்டர் தொலைவுக்கும், நியூயார்க்கில் 468 நிலையங்களுடன் 1355 கி.மீ தொலைவுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் 80 ஆண்டுகளுக்கு முன்பு 1935 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை 196 நிலையங்களுடன் 327 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது.

இத்தகைய சூழலில் தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்யும் திமுகவும், அதிமுகவும் 30 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வந்து சென்னை மாநகரம் முழுவதும் சேவையை விரிவு படுத்தியிருந்தால் இரு கட்சிகளையும் பாராட்டியிருக்கலாம். ஆனால், அதற்கான தொலைநோக்குப் பார்வை இருகட்சிகளுக்கும் இல்லை.

இந்தியாவில் எடுத்துக் கொண்டாலும், நாட்டிலேயே முதன்முறையாக கொல்கத்தாவில் தான் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் 31 ஆண்டுகள் கழித்து தான் சென்னையில் ஒரு சிறிய பகுதியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. இது சாதனையா... பெருமைக்குரிய விஷயமா?

கொல்கத்தாவுக்குப் பிறகு டெல்லியில் 2002 ஆம் ஆண்டிலும், பெங்களூரில் 2011 ஆம் ஆண்டிலும், குர்கான், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் முறையே 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளிலும் தொடங்கி வைக்கப்பட்டு அவற்றுக்குப் பிறகு 7-வது நகரமாக சென்னையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது வெட்கப்பட வேண்டிய விஷயமே தவிர பெருமைக்குரிய ஒன்றல்ல.

அதுவும் கூட திட்டமிடப்பட்டதைவிட தாமதமாக, 6 ஆண்டுகள் கழித்து தான் 10.15 மீட்டர் நீளமுள்ள சென்னை மெட்ரோ தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால், டெல்லியில் 4 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் தொடங்கப்பட்டதுடன், இப்போது 3 மாநிலங்களை இணைக்கும் வகையில் மொத்தம் 194 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக டெல்லியில் போக்குவரத்து நெரிசல் 24 விழுக்காடு குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப்பணிகள் நடந்து கொண்டிருக்கும்போதே, இரண்டாம் கட்டப் பணிகள் திட்டமிடப்பட்டு, உரிய அனுமதிகள் பெறப்பட்டு தொடங்கப்பட்டு விட்டன. ஆனால், சென்னையில் இரண்டாம் கட்ட பணிகளுக்கான சிந்தனை கூட இன்னும் எழவில்லை. அவ்வளவு ஏன்..? முதல்கட்டத்தின் நீட்சியாக இத்திட்டத்தை சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் வரை நீட்டிக்க அனுமதி தரப்பட்டு விட்டதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவித்து 10 மாதங்களாகியும் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த இப்போது முடிவு எடுக்கப்பட்டாலும் அது செயல்வடிவம் பெற குறைந்தது இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம். இதனால் சென்னையின் போக்குவரத்து நெரிசல் குறைவதற்குப் பதில் அதிகரிக்கவே செய்யும். தமிழக ஆட்சியாளர்களின் தொலைநோக்கு சிந்தனை இந்த அளவில் தான் உள்ளது. தமிழக அரசு நினைத்திருந்தால் 10 மாதங்களுக்கு முன்பே இத்திட்டத்தை தொடங்கி வைத்திருக்க முடியும். ஆனால், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவி நீக்கப்பட்ட ஜெயலலிதா மீண்டும் பதவியேற்ற பிறகு தான் இத்திட்டம் தொடங்கப்பட வேண்டும் என்பதில் தமிழக ஆட்சியாளர்கள் உறுதியாக இருந்ததால் மெட்ரோ ரயில் சேவை மிகவும் தாமதமாகவே தொடங்கியுள்ளது.

சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒத்துவராது; ‘உலகெங்கும் தோல்வியடைந்த’ மோனோ ரயில் தான் சிறப்பாக இருக்கும் என 2003-ம் ஆண்டிலிருந்து கூறிவரும் ஜெயலலிதா இப்போது மெட்ரோ ரயில் எங்களின் திட்டம் என்று பெருமை பேசுவதும், 2006 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2009-ம் ஆண்டின் இறுதியில் அடிக்கல் நாட்டி தாமதப்படுத்திய முந்தைய ஆட்சியாளர்கள் இது நாங்கள் கொண்டு வந்த திட்டம் என்று விளம்பரப்படுத்துவதும் நகைக்கத்தக்கதாக உள்ளதே தவிர ரசிக்கத்தக்கதாக இல்லை.

சென்னை பெருநகரின் மக்கள் தொகை ஒரு கோடியை தாண்டி விட்டது. அடுத்த சில ஆண்டுகளில் இது இன்னும் அதிகரிக்கக்கூடும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு சென்னையை நெரிசல் இல்லாத நகரமாக மாற்றும் நோக்குடன் ஒருங்கிணைந்த பொதுப் போக்குவரத்து அமைப்பு (Chennai Integrated Public Transport System) உருவாக்கப்பட வேண்டும்.

அதன்படி மெட்ரோ ரயில் சேவையை வடக்கில் பொன்னேரி, தெற்கில் மாமல்லபுரம், மேற்கில் திருப்பெரும்புதூர், தென்மேற்கில் செங்கல்பட்டு வரை நீட்டிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதுதவிர சென்னையில் அதிவேக பேருந்து போக்குவரத்து அமைப்பும் (Chennai Bus Rapid Transit System - BRTS), சென்னை கலங்கரை விளக்கம் தொடங்கி மாமல்லபுரம் வரை நீர்வழிப் போக்குவரத்து சேவையும் (Water Transport) தொடங்கப்பட வேண்டும். சென்னை மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கையை 3000லிருந்து 6000 ஆக உயர்த்த வேண்டும்.

பறக்கும் ரயில் திட்டத்தை (Chennai Mass Rapid Transit System- MRTS)) முழுமையாக செயல்படுத்த வேண்டும். புறநகர் ரயில் சேவையையும் மேம்படுத்தி இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும். ஒரே பயணச்சீட்டில் இவை அனைத்திலும் பயணிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். இவற்றின் மூலம் தான் சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும். அதுமட்டுமின்றி, மெட்ரோ ரயில் சேவைக் கட்டணம் டெல்லிக்கு இணையாக குறைக்கப்பட வேண்டும்.

இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக மத்திய அரசிடமிருந்தும், சர்வதேச சமுதாயத்திடம் இருந்தும் பெற வேண்டிய உதவிகளைப் பெறுவதற்காக தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

அதை விடுத்து இன்னும் முழுமை பெறாத மெட்ரோ ரயில் திட்டத்துக்கு யார் காரணம் என அதிமுகவும், திமுகவும் சண்டையிட்டுக் கொள்வது பெற்றெடுக்காத பிள்ளைக்கு பெயர் சூட்டுவதற்கு அடித்துக் கொள்ளும் செயலுக்கு இணையானதாகவே மக்களால் பார்க்கப்படும்'' என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x