Published : 12 Jun 2015 08:35 AM
Last Updated : 12 Jun 2015 08:35 AM

சென்னை தனியார் பள்ளி கல்விக் கட்டண விவகாரம்: பள்ளிக் கல்வி இணை இயக்குநர் தலைமையில் அதிகாரிகள் குழு நேரில் விசாரணை - நீதிபதி எஸ்.ஏ.சிங்காரவேலு கமிட்டியிடம் விரைவில் அறிக்கை

சென்னை பால வித்யா மந்திர் கல்விக்கட்டண விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் குழு நேற்று பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியது.

சென்னை அடையாறில் உள்ள பாலவித்யா மந்திர் பள்ளியில் மாணவர்கள் இடையே பாகுபாடு ஏற்படுத்தும் வகையில் இரு மாதிரியான கல்விக்கட்டணத்தை பள்ளி நிர்வாகம் நிர்ணயித்தது. அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை செலுத்தும் மாணவர்களுக்கு அடிப்படை கல்வி மட்டுமே வழங்கப்படும் என்றும், பள்ளி நிர்வாகம் வரையறை செய்துள்ள மாணவர்களுக்கு மட்டுமே சிறப்பு வகுப்பு உள்பட 59 விதமான வசதிகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும், பெற்றோரும் அண்மையில் பள்ளியில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக் கும் வகையில் ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்தனர். தனியார் பள்ளி கல்விக்கட்டண நிர்ணயக் குழுவான நீதிபதி எஸ்.ஏ.சிங்காரவேலு கமிட்டி யிடமும் பெற்றோர், ஆதாரங்களு டன் புகார் கொடுத்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு பள்ளிக் கல்வித் துறைக்கு அக்கமிட்டி உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி) எஸ்.கார்மேகம் தலைமை யில் விசாரணைக்குழு அமைக் கப்பட்டது.

கல்விக்கட்டண பிரச்சினை குறித்து பெற்றோர் அளித்த புகார் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு இணை இயக்குநர் கார்மேகமும் மற்றொரு இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) எம்.பழனிச்சாமியும் கடந்த 5-ம் தேதி பாலவித்யா மந்திர் பள்ளிக்கு நேரில் சென்று முதல்வரிடம் நோட்டீஸ் வழங்கினர்.

11-ம் தேதி பள்ளிக்கு நேரில் சென்று முதல்வர், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இணை இயக்குநர் கார்மேகம் தலைமையில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று காலை 11 மணிக்கு அடையாறில் உள்ள பாலவித்யா மந்திர் பள்ளிக்குச் சென்று விசாரணையை தொடங்கினர். விசாரணை அறிக்கை நீதிபதி எஸ்.ஏ.சிங்காரவேலு கமிட்டியிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x