Published : 06 Jun 2015 08:57 AM
Last Updated : 06 Jun 2015 08:57 AM
அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சூரிய ஒளியில் இயங்கும் ராட்டை திட்டம் மூலம் நாடு முழுவதும், 5 கோடி கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
திருப்பூரில் ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் தலைமை வகித்தார்.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியதாவது: பின்னலாடை தொழில்துறையினரின் கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, திருப்பூர் தொழில் துறையினரின் பிரச்சினைகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், தொழில்துறையினர் அளித்துள்ள மாநில அரசு நிர்வாகத்துக்கு உட்பட்ட, கோரிக்கை மனுக்களை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க முயற்சிப்பேன்.
அடுத்த, 10 ஆண்டுகளுக்குள் சூரிய ஒளியில் இயங்கும் ராட்டை திட்டம் மூலம் நாடு முழுவதும், 5 கோடி கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பான பேச்சுவார்த்தையை கோவையில் உள்ள ஒரு நிறுவனத்துடன் நடத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கச் செயலாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.
கோவை முன்னாள் எம்.பி., சி.பி.ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT