Published : 13 Mar 2014 09:50 AM
Last Updated : 13 Mar 2014 09:50 AM

தமிழகத்தில் காங்கிரஸ் பிரச்சாரம் 15ம் தேதி துவக்கம்: முதல் கூட்டத்தில் ஞானதேசிகன், சிதம்பரம் பங்கேற்பு

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முதல் பிரச்சாரக் கூட்டம் 15ம் தேதி சென்னையில் நடக்கிறது.

இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பங்கேற்கின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பாக 39 தொகுதிகளிலும் போட்டியிட 1200க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 24 பேர் கொண்ட தமிழகத் தேர்தல் குழு இந்த மனுக்களை பரிசீலனை செய்து, தோராயமாக ஒரு பட்டியலை தயாரித்துள்ளது.

இந்தப் பட்டியலுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கடந்த ஐந்து நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளார். வரும் 14ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அக்கட்சியின் முதல் பிரச்சாரக் கூட்டம், சனிக்கிழமையன்று தி.நகர் பஸ் நிலையம் அருகில் நடக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தென் சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் மேற்கொண்டுள்ளார்.

இதேபோல், வடசென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில், வரும் 14ம் தேதி முதல் மத்திய அரசின் சாதனை விளக்கக் கூட்டங்கள் பல்வேறு இடங்களில் நடத்தப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை, வடசென்னை மாவட்டத் தலைவர் ராயபுரம் மனோ மேற்கொண்டு வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x