Last Updated : 08 Jun, 2015 09:31 AM

 

Published : 08 Jun 2015 09:31 AM
Last Updated : 08 Jun 2015 09:31 AM

மேகி நூடுல்ஸ் சாப்பிட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னென்ன?- தமிழக அரசு ஆய்வு செய்ய கோரிக்கை

மேகி நூடுல்ஸை பல ஆண்டுகளாக சாப்பிட்டுவந்த குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன என்பதைப் பற்றி தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் டாக்டர் எஸ்.இளங்கோ கூறியுள்ளார்.

மேகி நூடுல்ஸில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன உப்பு, காரீயம் ஆகியவை குறிப் பிட்ட அளவைவிட அதிக மாக க லக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பல ஆண்டுகளாக மேகி நூடுல்ஸை சாப்பிட்டுவந்த குழந்தைகள் எம்மாதிரியான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை கண்டறிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநரும், இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக தலைவருமான டாக்டர் எஸ்.இளங்கோ ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:

உடலுக்கு தீங்கு விளைவிக் கும் ரசாயன உப்பு மற்றும் காரீயம் அளவுக்கு அதிகமாக கலந் திருப்பதால் மேகி நூடுல்ஸுக்கு தடை விதித்துள்ளனர். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் படி இது சட்டப்படி குற்றமாகும். உணவில் கலப்படம் செய்துள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா முழுவதும் உணவில் கலப்படம் செய்ததாக சுமார் 15 ஆயிரம் வழக்குகள் உள்ளன. இதில் பாலில் கலப்படம் செய்ததாக மட்டும் 80 சதவீத வழக்குகள் உள்ளன. மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இதைக் காரணம் காட்டியே அந்த 15 ஆயிரம் வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற ஒரே காரணத்தினால் மேகி நூடுல்ஸை பல மாநில அரசுகள் தடை செய்துள்ளன. ஆனால் பல ஆண்டுகளாக குழந்தைகள் உட்பட ஏராளமானோர் அதை சாப்பிட்டுள்ளனர். அதைச் சாப்பிட்ட குழந்தைகள் உடல் ரீதியாகவும், மனதளவிலும் என்ன மாதிரியான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை தமிழக அரசு ஆய்வு செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “மேகி நூடுல்ஸை தொடர்ந்து பல ஆண்டுகளாக சாப்பிட்ட குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டு பிடிக்க அரசு தரப்பில் இருந்து எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்பட வில்லை. மேகி நூடுல்ஸ்களை தொடர்ந்து சாப்பிட்ட குழந்தை களை பரிசோதனை செய்தால், அவர்கள் என்ன மாதிரியான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை கண்டுபிடிக்க முடியும். ஆனால் இதுபற்றி அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்” என்றனர்.

இந்தியா முழுவதும் உணவில் கலப்படம் செய்ததாக சுமார் 15 ஆயிரம் வழக்குகள் உள்ளன. இதில் பாலில் கலப்படம் செய்ததாக மட்டும் 80% வழக்குகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x