Published : 13 Jun 2015 10:35 AM
Last Updated : 13 Jun 2015 10:35 AM

15-வது வன உயிரின சரணாலயமாகிறது திருநெல்வேலி

தமிழகத்தின் 15-வது வன உயிரின சரணாலயமாக “நெல்லை வன உயிரின சரணாலயம்” அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கை விரைவில் அரசிதழில் வெளியாக உள்ளது.

உயிர்ப் பன்மை பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் முன் னிலை வகித்துவரும் மாநிலங் களில் ஒன்றாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. சுற்றுச்சூழலுடன் இணைந்த உயிர்ப் பன்மை செறிந் துள்ள பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மேலாண்மையின் கீழ் கொண்டு வருவதன் மூலம் வன உயிரினங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உகந்த சூழல் ஏற்படும். தமிழகத்தில் ஏற்கெனவே முது மலை, களக்காடு, கன்னியாகுமரி என 14 வன உயிரின சரணாலயங்கள் உள்ளன.

எனவே திருநெல்வேலி மாவட் டத்தில் உயிரியல் முக்கியத்துவம் நிறைந்த சில பகுதிகளை உள்ளடக்கி மாநிலத்தின் 15-வது வன உயிரின சரணாலயமாக “நெல்லை வன உயிரினச் சரணாலயம்” ஏற்படுத் தப்படும் என்று கடந்த ஆண்டு சட்டப் பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர் மூலம், “நெல்லை வன உயிரினச் சரணா லயம்” ஏற்படுத்துவதற்கான கருத் துரு அரசுக்கு அனுப்பிவைக் கப்பட்டது.

அரசால் கருத்துரு ஏற்கப்பட்டு, திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கி “நெல்லை வன உயிரினச் சரணாலயம்” என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கை விரைவில் வெளிவரவுள்ளது.

இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்த வன உயிரின சரணாலயம், திருநெல்வேலி மாவட்டத்தில் சிவகிரி, தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகள் உள்ளடங்கிய 35 ஆயிரத்து 673 ஹெக்டேர் பரப்பளவை கொண்டது. இப்பகுதி, கேரள மாநிலத்தில் இருந்து யானைகள் தமிழகத்துக்குள் வந்து செல்லும் வழித்தடமாக உள்ளது. இங்கு புலி, சிறுத்தை, மான், காட்டுப் பன்றி போன்ற பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதி வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டதன் மூலம், இங்குள்ள வன உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு, அவற்றின் எண்ணிக்கை கூடும். வனப் பாதுகாப்புக்கும் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இப்பகுதிக்குள் இனி பொதுமக்கள் எளிதில் நுழைய முடியாது. வன உயிரின பாதுகாப்பு சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும். வனப்பகுதிக்குள் பொதுமக்கள் சென்று புளி, கடுக்காய் போன்றவற்றை சேகரித்து இனி விற்பனை செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

குற்றாலம் விடுவிப்பு

குற்றாலம் அருவிகளுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். அப்பகுதியை வன உயிரின சரணாலய எல்லைக்குள் கொண்டுவந்தால், சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவார்கள். அவர்களை அருவிகளுக்கு செல்லவும் அனுமதிக்க முடியாது. அதனால் அப்பகுதி வன உயிரின சரணாலய எல்லைக்குள் கொண்டுவரப்படவில்லை என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x