Published : 29 Jun 2015 07:38 PM
Last Updated : 29 Jun 2015 07:38 PM
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக, ஆவின் நிர்வாகம் பால்உற்பத்தியாளர்களை பழிவாங்கி வருகின்றது. உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பாலை கொள்முதல் செய்யாமல் ஏதேனும் ஒரு காரணத்தை கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர். ஆனால், பால் உற்பத்தியாளர்களை பழிவாங்கக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக, ஆவின் நிர்வாகம் பால்உற்பத்தியாளர்களை பழிவாங்கி வருகின்றது. உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பாலை கொள்முதல் செய்யாமல் ஏதேனும் ஒரு காரணத்தை கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர்.
உற்பத்தியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து முறையிட்டும் பயன் அளிக்காத நிலையில், பாலை சாலைகளில் கொட்டும் அவலத்திற்கு ஆளாகியுள்ளனர்.
திருச்சி மாவட்ட கூட்டுறவு பால்உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்திற்கு உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பாலை தாமதமாக பெறுவது, பெற்ற பின் பால் கெட்டுவிட்டதாகக்கூறி நிர்வாகமே வாய்க்காலில் கொட்டுவது தொடர்ந்த காரணத்தால், நிர்வாகத்தின் அராஜகமான நடவடிக்கைகளை கண்டித்து உற்பத்தியாளர்களே 50 ஆயிரம் லிட்டர் பாலை வாய்க்காலில் ஊற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
நியாயமான விலையில் தரமான பாலை ஆவின் நிர்வாகம் வழங்கி வருகின்றது என்கிற நம்பிக்கையோடு பால் வாங்கும் பொதுமக்களுக்கும், பால் உற்பத்தியாளர்களுக்கும் ஆவின் நிர்வாகம் ஏதோ ஒரு வகையில் துரோகம் இழைப்பது தொடர்வது கண்டனத்திற்குரியதாகும்.அரசு இனியும் காலம் தாழ்த்தாது இப்பிரச்சினையில் உடன் தலையிட வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.
ஆவின் நிர்வாகத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருவதை அரசு கண்டும், காணாமல் இருப்பதால், உற்பத்தியாளர்களும், நுகர்வோரும் பாதிக்கப்படுகின்றனர்.
உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பாலை திருப்பி அனுப்பாமல் முழுமையும் கொள்முதல் செய்திடவும், பொதுமக்களுக்கு முறையாக பால் கிடைத்திடவும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT