Last Updated : 02 May, 2015 08:18 AM

 

Published : 02 May 2015 08:18 AM
Last Updated : 02 May 2015 08:18 AM

சிறு தொழில் பட்டியலிலிருந்து நீக்கம் - தீப்பெட்டித் தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறி: உற்பத்தியாளர்கள் அச்சம்

சிறு தொழில் பட்டியலில் இருந்து தீப்பெட்டித் தொழிலை மத்திய அரசு நீக்கியிருப்பதால் அதன் எதிர்காலம் கேள்விக்குறி யாகி இருப்பதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் முழு இயந் திரமயமாக்கப்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் 20, பகுதி இயந்திரமாக்கப்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் 300, முழுவதும் கையால் செய்யப்படும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் 2,000-க்கும் மேற்பட்டவை இயங்கி வருகின் றன. இத்தொழிலில் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். இதில் 90 சதவீதம் பேர் பெண்கள்.

நாட்டின் பெரும்பாலான பகுதி களுக்கு தமிழகத்தில் இருந்துதான் தீப்பெட்டி செல்கிறது. ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கும் தமிழகத்தில் இருந்து தீப்பெட்டிகள் ஏற்றுமதியாகின்றன.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டு களாகவே தீப்பெட்டித் தொழில் கடுமையாக நலிவடைந்து வரு கிறது. மூலப் பொருட்களின் விலை உயர்வு, கலால் வரி உயர்வு, ஏற்று மதி சரிவு, தீப்பெட்டி பயன்பாடு குறைவு போன்ற காரணங்களால் தீப்பெட்டித் தொழில் நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது.

இந்த நிலையில், சிறு தொழில்களில் இருந்து தீப்பெட்டித் தொழிலை நீக்கி புதிய தொழில் நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. உலகளாவிய போட்டியை சமாளிக்கவும், நவீன தொழில்நுட்பங்களை புகுத்தவும் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலை பெரிய நிறுவனங்களும் மேற்கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடைமுறை காரணமாக தமிழகத்தின் பாரம் பரிய தொழில்களில் ஒன்றான தீப்பெட்டித் தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அச்சம் தெரிவிக்கின்றனர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்.

1923-ல் தொடங்கிய தொழில்

தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஜே. தேவதாஸ் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 1923-ம் ஆண்டு சிவகாசியில் குடிசை தொழிலாக தொடங்கிய தீப்பெட்டி உற்பத்தி தொழில், படிப்படியாக வளரத் தொடங்கியது. வறட்சியான தென்மாவட்டங்களில் ஏராளமானோருக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.

கடந்த சில ஆண்டுகளாகவே தீப்பெட்டித் தொழில் நலி வடைந்து வரும் நிலையில், தற்போது சிறு தொழில்களில் இருந்தும் தீப்பெட்டித் தொழில் நீக்கப்பட்டிருப்பது இத்தொழிலின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.

எந்த பெரிய நிறுவனமும் தீப்பெட்டி தயாரித்து விற்பனை செய்யலாம் என அனுமதி அளித் திருப்பதன் மூலம் சிறு தொழில் செய்வோர் தாக்குப்பிடிக்க முடி யாமல் காணாமல் போய்விடு வார்கள். சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

மறுபரிசீலனை அவசியம்

நாகரிகம், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகம் முழுவதுமே தீப்பெட்டி பயன்பாடு குறைந்து வருகிறது. நாட்டில் தேவைக்கு அதிகமாகவே தீப் பெட்டி தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் தீப்பெட்டி பண்டல்கள் பெருமளவில் தேங்கிக் கிடக்கின் றன.

இந்த சூழ்நிலையில் பெரிய நிறுவனங்களை இந்த தொழிலில் ஈடுபட அனுமதிப்பது தேவையில்லாதது. சிறு தொழில்களை அழிக்க வேண்டும், அனைத்து துறையிலும் பெரிய நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டும் என்பதே மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காரணம் என கருதுகிறோம்.

அனைத்து தீப்பெட்டி தொழிற் சாலைகளும் இயந்திரமயமாகி விட்டால், இந்த தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே, மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சிறு உற்பத்தியாளர்கள் மட்டுமே தீப்பெட்டி உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x