Published : 18 May 2015 07:36 AM
Last Updated : 18 May 2015 07:36 AM

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரிக்கு எம்சிஐ அனுமதி: மத்திய அரசு அறிவிப்புக்காக தமிழக அரசு காத்திருப்பு

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்புக்காக தமிழக அரசு காத்திருக்கிறது.

சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த புதிய மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை அனுமதி கேட்டு கடந்த ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் (எம்சிஐ) தமிழக அரசு விண்ணப்பித்தது.

இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எம்சிஐ அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் குறைபாடுகளை சுட்டிக்காட்டி சரிசெய்யும்படி தெரிவித்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து எம்சிஐ அதிகாரிகள் சொன்ன குறைபாடுகளை தமிழக அரசு சரிசெய்தது. இந்நிலையில், இரண்டாவது முறையாக கடந்த மாதம் எம்சிஐ அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது எம்சிஐ அதிகாரிகள் திருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் டெல்லியில் நடந்த எம்சிஐ அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தமிழகத்தில் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை எம்சிஐ அதிகாரிகள், மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளனர். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அனுமதிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.200 கோடியில் கட்டப்பட்டுள்ளது. ரூ.12 கோடியில் உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரியில் மருத்துவமனை பணிகள் நிறைவுப் பெறவில்லை. அதனால் திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை வளாகத்தில், கல்லூரிக்காக தற்காலிக பொது மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்த இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் குழுவினர், கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கலாம் என்ற பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்துள்ளனர். மத்திய அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம். இந்த புதிய கல்லூரியுடன் சேர்த்து தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 20 ஆகவும், எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 2,555-ல் இருந்து 2,655 ஆகவும் அதிகரிக்கும். நடப்பு கல்வி ஆண்டிலேயே புதிய மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x