Published : 08 May 2015 07:25 AM
Last Updated : 08 May 2015 07:25 AM

தமிழகத்தில் உற்பத்தியாகும் சர்க்கரைக்கு வாட் வரி விலக்கு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழகத்தில் உற்பத்தியாகும் சர்க்கரைக்கு வாட் வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

மத்திய, மாநில அரசுகளையும் சர்க்கரை ஆலைகளையும் நம்பியே கரும்பு விவசாயிகள் உள்ளனர். ஆனால், கரும்புக்கு கட்டுப்படியாகும் விலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயிப்பதில்லை. ஆலைகளும் உரிய விலை கொடுப்பதில்லை. கடந்த ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.525 கோடியை இதுவரை வழங்கவில்லை.

வெளிமாநிலங்களில் இருந்து வரும் சர்க்கரை, எரிசாராயம் போன்ற பொருட்கள் தமிழகத்தில் குறைந்த விலையில் கிடைக் கின்றன. இதனால், இங்கு உற்பத்தியாகும் சர்க்கரை, எரிசாராயம் விற்பனை ஆகாமல் தேங்கியுள்ளன. தமிழகத்தில் வாட் உள்ளிட்ட வரிகள் அதிகமாக இருப்பதும் இதற்கு காரணமாகும்.

எனவே, தமிழகத்தில் உற்பத்தியாகும் சர்க்கரைக்கு வாட் வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை முழுமையாக கொள்முதல் செய்து உரிய விலை வழங்க வேண்டும். சர்க்கரை விலை சரிந்து வருவதால் எத்தனால் போன்ற உபபொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்துள்ளனர். காலம் தாழ்த்தாமல் இந்த கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x