Published : 06 May 2015 12:48 PM
Last Updated : 06 May 2015 12:48 PM

ஒரே மேடையில் விவாதிக்க தயாரா?- ஸ்டாலினுக்கு அன்புமணி சவால் கடிதம்

தமிழக மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும், ஈழத் தமிழர் நலனுக்காகவும் தி.மு.க. எதையாவது செய்திருப்பதாக நீங்கள் கருதினால் அது குறித்தும் ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார்... நீங்கள் தயாரா? என கேள்வி எழுப்பி திமுக பொருளாளார் ஸ்டாலினுக்கு, பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

அன்புமணி கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டை சீரழித்ததில் அ.தி.மு.க.வுக்கு மட்டுமல்ல, தி.மு.க.வுக்கும் பங்கு இருக்கிறது என்று கூறி தங்களுக்கு நேற்று முன்நாள் நான் கடிதம் எழுதியிருந்தேன்.

அந்தக் கடிதத்தில் நான் எழுப்பிய வினாக்களுக்கு நீங்கள் பதில் சொல்லியிருந்தாலோ, தவறுகளை ஒப்புக்கொண்டு திருத்திக் கொள்வதாக அறிவித்திருந்தாலோ அது நாகரீகமான அரசியலுக்கு வழி கோலியிருந்திருக்கும்.

ஆனால், 'தளபதி' என்று அழைக்கப்பட்டாலும் சட்டப்பேரவையில் எப்படி நீங்கள் பதுங்கிக் கொண்டு, மற்ற உறுப்பினர்களை பாய வைப்பீர்களோ... அதேபோல் இப்போதும் எனது கடிதத்திற்கு என்னால் தோற்கடிக்கப்பட்ட ஒருவர் மூலம் தரக்குறைவாக பதில் அளிக்க வைத்திருக்கிறீர்கள்.

ஒருவேளை அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள உண்மைக்கு மாறான அவதூறுகளை எழுத உங்களுக்கு கூசியதால் கூட அவ்வாறு செய்திருக்கலாம். ஆனால், நான் உங்களைப் போன்றவன் அல்ல. அநாகரீக, லாவணி அரசியல் நடத்துபவனும் அல்ல. அதனால் தான் நானே மீண்டும் உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.

மக்கள் சார்பில் கேள்வி கேட்டேன்:

நான் தங்களுக்கு எழுப்பியிருந்த கேள்விகள் அனைத்தும் தமிழகத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் மனதில் எழும் கேள்விகள் தான்.

இந்தக் கேள்விகளை எழுப்பியதற்காக பல்வேறு தரப்பு மக்களும் என்னைத் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். அவர்களில் பலர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால், தி.மு.க. 21 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தது. நீங்கள் 5 ஆண்டுகள் மேயராகவும், 5 ஆண்டுகள் அமைச்சராகவும், இரு ஆண்டுகள் துணை முதலமைச்சராகவும் இருந்தீர்கள்.

ஆனால், உங்களாலும், தி.மு.க.வாலும் இவற்றில் எந்த புகாருக்கும் பதில் கூற முடியவில்லை. இவை அனைத்தும் உண்மைகள்; இவற்றை மறுக்க முடியாது என்பதால் தான் அவற்றை விட்டு விட்டு தமிழகத்தின் நலனுக்கு தொடர்பில்லாதவை பற்றி ஆள் வைத்து மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் அறிக்கை வெளியிட்டிருக்கிறீர்கள்.

எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு நாகரீகமான முறையில் எப்படி பதில் கூறுவது என்பதை கருணாநிதியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

எங்கள் கொள்கை- நாகரீகமான, வளர்ச்சி அரசியல்:

நாகரீகமற்ற அரசியலை செய்து வரும் உங்களிடம் இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. உங்கள் குறைகளை யார் சுட்டிக்காட்டினாலும் அவர்களை நாகரீகமற்ற முறையில் விமர்சிப்பது உங்களுக்கு பழகிப் போன ஒன்று.

ஆனால், தரம் தாழ்ந்து விமர்சிப்பது எங்கள் வழக்கம் அல்ல. நாகரீகமான, வளர்ச்சி அரசியல் (Decent and Development Politics) தான் எங்களின் கொள்கை. அப்படித்தான் நான் வளர்க்கப்பட்டிருக்கிறேன். எனவே, உங்கள் தரப்புக்கு நாகரீகமாக பதில் தருவது தான் எனது இந்த கடிதத்தின் நோக்கம்.

அ.தி.மு.க.வுடனும், தி.மு.க.வுடனும் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்ததாக தி.மு.க. குற்றஞ்சாற்றியிருக்கிறது. இது உண்மை தான். இதைக் கண்டுபிடிப்பதற்காக நீங்கள் ஒரு குழு அமைத்து ஆராய்ச்சி செய்திருக்கத் தேவையில்லை. உங்களுடனும், அ.தி.மு.க.வுடனும் கூட்டணி அமைத்தது தான் நாங்கள் செய்த மிகப்பெரியத் தவறு ; இந்தத் தவறை ஒருபோதும் மீண்டும் செய்ய மாட்டோம்.

இதற்காக வருத்தம் தெரிவித்தது மட்டுமின்றி மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு கட்சி தவறை ஒப்புக்கொள்வது சாதாரணமான விஷயமல்ல.

அதுமட்டுமின்றி, 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 96 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்த தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தி உங்கள் தலைவரை முதல்வராகவும், உங்களை துணை முதலமைச்சராகவும் அமர வைத்தது நாங்கள் செய்த இன்னொரு தவறு ஆகும்.

இந்த தவறுகளுக்கு பரிகாரம் தேடுவதற்காகவே தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத அரசை அமைக்க வேண்டும் என்று முடிவெடுத்து மக்கள் பணியாற்றி வருகிறோம்.

15 முறை கூட்டணி மாற்றிய திமுக:

மாறிமாறி கூட்டணி அமைப்பதில் தி.மு.க.வின் மோசமான வரலாறு என்ன? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதுவரை 15 முறை மாற்றி மாற்றி கூட்டணி வைத்துக் கொண்ட கட்சி தானே தி.மு.க.. 1976 ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியைக் கலைத்தற்காக அன்னை இந்திரா காந்தியை விதவை என்றும், வெளியில் சொல்லமுடியாத அநாகரீகமான வார்த்தைகளாலும் விமர்சனம் செய்ததுடன், மதுரையில் சுற்றுப்பயணம் செய்ய வந்த அவரை குண்டர்களை ஏவி கொலை செய்யவும் முயன்றது தி.மு.க.

அடுத்து நடந்த 1980 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக..! என விளித்ததும் கருணாநிதி தான்.

1998 ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வை பண்டாரங்களின் கட்சி என்று விமர்சித்த கலைஞர், 1999ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகியதும் தில்லியிலிருந்த முரசொலி மாறன் மூலமாக துண்டு போட்டு அந்தக் கூட்டணியில் சேர்ந்தது உங்களுக்கு மறந்து போயிருந்தால் கலைஞரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

அவ்வளவு ஏன்.... 2011 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, நடிகர் வடிவேலுவை வைத்து, ‘‘கேப்டனா... அவன் எந்தக் கப்பலுக்குக் கேப்டன்? கடல்ல தண்ணில மிதக்கிற கப்பலை ஓட்டுறவன் கேப்டன்.

சதா தண்ணியில மிதக்கிறவன் கேப்டனா?’’ என்றெல்லாம் யாரைப் பற்றி பேச வைத்து, அதை தங்களின் குடும்பத் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப வைத்து நீங்களும், கருணாநிதியும் ரசித்தீர்களோ, இன்று அவரை வீட்டிற்கு அழைத்து பரஸ்பரம் படத்தை மாற்றிக் கொள்ளும் ‘படம் காட்டும்’ நிகழ்வுகள் எல்லாம் தமிழக நலனைக் கருத்தில் கொண்டவையல்ல... கூட்டணியை மட்டும் கணக்கில் கொண்டவை என்பதை தமிழக மக்கள் அனைவரும் அறிவர்.

விஜயகாந்தின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தி.மு.க. தள்ளப்பட்டது உண்மையாகவே வருத்தமளிக்கும் விஷயமாகும்.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுடனும் தி.மு.க. கூட்டணி அமைத்ததா... இல்லையா? தி.மு.க.வின் கூட்டணி வரலாறு இப்படி இருக்கும் போது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் உமிழ்ந்தால் அது மார்பின் மீது தான் விழும் என்பதை தயவுசெய்து நீங்கள் உணர வேண்டும்.

நீங்கள் தேர்தலில் எப்படி வெற்றி பெற்றீர்கள்?

தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று கூறி விட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நான் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தது எப்படி? என்பது உங்கள் கட்டளைப்படி என்னிடம் கேட்கப்பட்டுள்ள இன்னொரு கேள்வி. மக்களும், கட்சியினரும் விரும்பியதால் அந்தப் பதவிக்கு வந்தேன்.

ஆனால், ஸ்டாலின் அவர்களே.... மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்... அப்பா முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர், இன்னொரு மகன் மத்திய அமைச்சர், மகள் நாடாளுமன்ற உறுப்பினர், மருமகன் மத்திய அமைச்சர், பேரன் மத்திய அமைச்சர்.... இந்தியாவில் வேறு எந்தக் கட்சித் தலைமையாவது தொண்டர்கள் உழைப்பை இப்படி சுரண்டி பயனடைந்ததுண்டா?

திமுக எனக்கு சலுகை செய்யவில்லை:

நான் மாநிலங்களவை உறுப்பினராவதற்கும், மத்திய அமைச்சராவதற்கும் உதவி செய்தவர் கலைஞர் என்று தி.மு.க. கூறியிருக்கிறது. எனக்கான மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்பது தி.மு.க. எனக்குக் கொடுத்தது சலுகை அல்ல.

2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளை வழங்குவதற்கு பதிலாக 6 தொகுதிகள் மட்டும் வழங்கப்பட்டதால் ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்படும் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

அதன்படி தான் அடுத்து வந்த மாநிலங்களவைத் தேர்தலில் எனக்கு தி.மு.க. ஆதரவு அளித்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி உறுப்பினர்கள் 15 பேர் எனக்கு வாக்களித்தார்கள்.

அதன்பிறகு 2007, 2008, 2010 ஆகிய தேர்தல்களில் பா.ம.க.வின் 18 உறுப்பினர்கள் ஆதரவுடன் தான் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள்.

ஒருமுறை எங்களுக்கு நீங்கள் ஆதரவு கொடுத்ததற்காக 3 முறை எங்களின் ஆதரவை உங்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.

அதேபோல், 2004 ஆம் ஆண்டில் பா.ம.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைப்படி தான் எனக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டது.

அதை தி.மு.க. வாங்கித் தரவில்லை. ஆனால், 2006 ஆம் ஆண்டில் பெரும்பான்மை இல்லாத தி.மு.க. தமிழகத்தில் ஆட்சி அமைக்க நிபந்தனையின்றி ஆதரவளிப்பதாக ஆளுனரிடம் முதன்முதலில் கடிதம் கொடுத்தது பா.ம.க. தான். அவ்வகையில் கலைஞரை முதல்வராகவும், உங்களை துணை முதல்வராகவும் ஆக்கியது பா.ம.க. தான்.

108 ஆம்புலன்ஸ் திட்டம் உலக சாதனை:

மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி செய்த சாதனைகள் என்ன? என்று தி.மு.க. வினா எழுப்பியிருக்கிறது. இந்தியாவே போற்றும் 108 அவசர ஊர்தித் திட்டத்தை கொண்டு வந்தது நான் தான். இந்தத் திட்டம் 22 மாநிலங்களில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தால் கோடிக்கணக்கானோரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய சுகாதார இயக்கமான தேசிய ஊரக சுகாதார இயக்கத்தை (National Rural Health Mission) செயல்படுத்தியது நான் தான். இந்த திட்டத்தின் உதவியுடன் இந்தியாவின் தாய் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தை 50 விழுக்காட்டிற்கும் மேல் குறைத்ததும் நான் தான்.

இது மிகப்பெரிய உலக சாதனை என உலகெங்குமுள்ள மருத்துவ வல்லுனர்கள் பாராட்டியுள்ளனர். இத்திட்டத்தை அறிவித்ததற்காக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் தில்லியில் எனது அலுவலகத்துக்கே வந்து பாராட்டிச் சென்றார். சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் நான் பல்வேறு சிறப்பான பணிகளை செய்துள்ளேன். புகையிலைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தேன்.

பொது இடங்களில் புகைப் பிடிக்க தடை விதித்தேன், புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது எச்சரிக்கைப் படங்களை வெளியிட வைத்தேன். இதற்கு அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த உங்கள் தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவற்றைச் செயல்படுத்தினேன்.

சுகாதாரத் துறையில் நான் படைத்த சாதனைகளை பாராட்டி 4 சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 2 ஐ.நா.வின் சார்பு அமைப்பான உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனரால் வழங்கப்பட்டவை ஆகும். மற்றொன்று உலகின் மிகப்பெரிய புகையிலை எதிர்ப்பு அமைப்பான அமெரிக்க புற்றுநோய் சங்கத்தால் வழங்கப்பட்ட லூதர் எல்.டெர்ரி விருது ஆகும்.

போலியோ நோயைக் கட்டுப்படுத்த நான் எடுத்த நடவடிக்கைகளுக்காக சர்வதேச ரோட்டரி சங்கத்தின் போலியோ சாம்பியன் விருது வழங்கப் பட்டது. இது கெண்டுக்கி கர்னல் போன்று பணம் கொடுத்து வாங்கப்பட்ட விருது அல்ல. எனக்கு முன் இந்த விருதை ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், பில் கேட்ஸ், டோனி பிளேர், கோஃபி அனான் ஆகியோர் தான் பெற்றுள்ளனர். இதுபோன்ற விருதுகளை நீங்கள் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த வேறு எந்த தலைவர்களாவது பெற்றிருக்கிறார்களா?

ஊரக சுகாதார இயக்கத்தின் மூலம் சுமார் 15,000 கோடி மதிப்புள்ள சுகாதாரத் திட்டங்களை தமிழகத்திற்கு நான் கொண்டு வந்துள்ளேன். புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை ரூ.1500 கோடி செலவில் மேம்படுத்தி தன்னாட்சி அதிகாரம் அளித்துள்ளேன்.

ஆனால், தமிழகத்திற்காக நான் கொண்டு வந்த எய்ம்சுக்கு இணையான மதுரை அதி உயர் சிறப்பு மருத்துவமனை, சென்னை முதியோர் நல மருத்துவ மையம் ஆகியவற்றை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்ட அரசு தான் நீங்கள் துணை முதல்வராக இருந்த தி.மு.க. அரசு என்பதை நினைவூட்டுகிறேன்.

நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது மதுவை ஒழிக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உங்களால் ஏவப்பட்டவர் கூறியிருக்கிறார். மத்திய சுகாதார அமைச்சர் என்ற முறையில் புகையிலையை கட்டுப்படுத்த எனக்கு முழு அதிகாரம் இருந்தது. அதைப் பயன்படுத்தி புகையிலையைக் கட்டுப்படுத்தினேன்.

ஆனால், மது ஒழிப்பு மாநில அரசின் பட்டியலில் உள்ளது. இதற்கான நடவடிக்கையை மாநிலத்தில் ஆட்சி செய்த நீங்கள் தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

எனினும், மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மொத்தம் 3 ஆய்வுகளை நடத்தியிருக்கிறேன். மதுவை ஒழிப்பதற்கு மாநிலங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்பதற்காக தேசிய ஆல்கஹால் கொள்கையை கொண்டு வந்தேன்.

எனக்குப் பிறகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக வந்தவர் அதை செயல்படுத்தாமல் முடக்கி விட்டார். அதுமட்டுமின்றி, உலக சுகாதார அமைப்பின் சார்பில் மதுவின் ஆபத்தான பயன்பாட்டை தடுப்பதற்கான உலக உத்தியை உருவாக்கியதும் (Global strategy to reduce harmful use of alcohol), உலக சுகாதார நிறுவனத்தின் அமர்வில், அக்டோபர் 2 ஆம் தேதி காந்தியடிகள் பிறந்தநாளை உலக மது ஒழிப்பு நாளாக அறிவிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்ததும் நான் தான் என்பதை நல்லவர்கள் அறிவார்கள்.

நான் செய்த சாதனைகளை, "50 ஆண்டுகளில் செய்ய முடியாதவற்றை 5 ஆண்டுகளில் மருத்துவர் அன்புமணி சாதித்துள்ளார்" என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும், "அன்புமணி இராமதாசு ஒரு நடமாடும் மருத்துவ என்சைக்ளோபீடியா" என்று அப்போதைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியும் பாராட்டினார்கள். எனது சாதனைகளை பல மேடைகளில் பில் கிளிண்டனும், பில் கேட்சும் பாராட்டியுள்ளனர்.

தி.மு.க. சார்பில் கலைஞர் 19 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்திருக்கிறார். மத்திய அரசில் தி.மு.க. 18 ஆண்டுகள் அங்கம் வகித்திருக்கிறது. அக்கட்சி சாதித்தவை என்னவென்று சொல்ல முடியுமா? இப்போதும் மக்களுக்கு சேவை செய்கிற பெருமை மற்றும் உரிமையுடன் சொல்கிறேன்... 108 அவசர ஊர்தித் திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கம், 4 சர்வதேச விருதுகள் போன்றவை பாட்டாளி மக்கள் கட்சியின் அடையாளங்கள். ஆனால், ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஊழல், பதவிக்காகவும், ஊழலுக்காகவும் பேரம் பேசும் நீரா ராடியா ஒலிநாடா, நீதிபதி சர்க்காரியா ஆணையத்தின் விஞ்ஞான ஊழல் சான்றிதழ் ஆகியவையே தி.மு.க.வின் அடையாளங்கள். இதை உங்களால் மறுக்க முடியுமா?

இடஒதுக்கீட்டை மனமுவந்து தரவில்லை:

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கொடுத்ததாக நீங்கள் மார்தட்டிக் கொள்கிறீர்கள். 8 ஆண்டுகளாக போராடி, 21 உயிர்களைத் தியாகம் செய்து தான் 20% இடஒதுக்கீடு பெறப்பட்டது. வன்னியர்களுக்கு மட்டுமின்றி 108 சமுதாயங்களுக்கான இட ஒதுக்கீட்டை மருத்துவர் அய்யா அவர்கள் தான் போராடி பெற்றுக் கொடுத்தார். நாங்கள் நடத்திய போராட்டத்தின் பயனை அடைந்ததில் உங்கள் சமுதாயமும் அடங்கும். இதற்காக நீங்கள் எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமே தவிர, அவதூறு பரப்பக்கூடாது.

அந்த இடஒதுக்கீட்டை கருணாநிதி மனமுவந்து தரவில்லை; தர வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. அந்த நேரத்தில் யார் முதல்வராக இருந்திருந்தாலும் இட ஒதுக்கீட்டை மறுத்திருக்க முடியாது.

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமும் அப்படிப்பட்டது தான். தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் காலம் காலமாக புளோரைடு மிகையால் பாதிக்கப் பட்டுள்ளனர். 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அவலம் நீடிக்கிறது.

இதுவரை 5 முறை முதலமைச்சராக இருந்த கலைஞர் முந்தைய 4 முறைகளில் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியிருக்கலாமே? 19 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ம.க. போராடியதன் பயனாகத் தானே 2008 ஆம் ஆண்டில் அந்தத் திட்டத்திற்கு கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.

அந்தவிழாவில் கருணாநிதி பேசும்போது, இந்தத் திட்டம் கொண்டுவரப்படுவதற்கு முக்கியக் காரணம் மருத்துவர் அய்யாவும், பா.ம.க.வும் தான் என்று கூறியது உங்களுக்கு தெரியுமோ, தெரியாதோ. ஆனால், இந்த உண்மை கருணாநிதிக்குத் தெரியும்.

நீதி வெல்லும்:

கடைசியாக நான் ஊழல் செய்துவிட்டதாகக் கூறுகிறார்கள்? காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதைப் போல ஊழல் செய்தே பழக்கப்பட்டுப் போனவர்களுக்கு எல்லாமே ஊழலாகத் தெரிகிறது. மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி புதுப்பிக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். அது ஊழல் வழக்கே இல்லை.

அந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் அன்புமணி யாரிடமாவது ஒரு பைசா வாங்கியதாகவோ, யாரையும் சந்தித்ததாகவோ எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அனுமதி வழங்குவதில் அதிகாரிகள் நடைமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்பது தான் குற்றச்சாற்று.

மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ள போதிலும், அதை மறைத்துவிட்டு, அரசியல் காரணங்களுக்காக என் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் நீதி வெல்லும்.

சென்னை சிங்காரமாக காட்சியளிக்கிறதா?

சென்னையின் மேயராகவும், உள்ளாட்சி அமைச்சராகவும் இருந்த காலத்தில் சென்னையில் நீங்கள் மேம்பாலங்களைக் கட்டியதாகக் கூறுகிறார்கள். மேம்பாலங்கள் கட்டியதன் நோக்கம் அனைவருக்கும் தெரியும். அதனால் போக்குவரத்து நெரிசல் தீர்ந்ததா? சென்னை சிங்காரமாக காட்சியளிக்கிறதா? கூவம் மணக்கிறதா?

டெங்குவும், சிக்குன்குனியா போன்ற நோய்களும் சென்னை மக்களை அவதிப் படுத்துவதற்கு உங்கள் காலத்திலிருந்து தொடரும் சுகாதாரக் கேடுகளும், தேங்கும் மழை நீரும் தான் காரணம் என்பதை மக்கள் அறிவார்கள்.

மக்கள் ஆதரவே போதும்:

தமிழகம் ஒன்றும் தைலாபுரம் அல்ல நீங்கள் ஆள்வதற்கு? என்று தி.மு.க. கூறியுள்ளது. நாங்கள் ஆட்சியைப் பிடிப்பது பகல் கனவா? என்பது இருக்கட்டும்... 66 ஆண்டுகள் ஆன உங்கள் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தைக் கூட பிடிக்க முடியாமல் படுதோல்வி அடைந்தது.

ஆனால் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் துணையின்றி வெற்றி பெற்றிருக்கிறோம். மக்கள் எங்களை ஆதரிக்க முடிவு செய்து என்பதையும், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை புறக்கணிக்க முடிவு செய்து விட்டார்கள் என்பதையும் இது காட்டுகிறது.

விவாதத்துக்கு தயாரா?

தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அதற்காக தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆட்டிப் படைக்கும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கிரகணங்களையும் விரட்டியடிக்க வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவே நாங்கள் போராடுகிறோம். அதற்காகத் தான் இரு கட்சிகளின் குறைகளையும் அம்பலப்படுத்துகிறோம். எங்களின் இந்தப் பணி தொடரும்.

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தமிழக மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும், ஈழத் தமிழர் நலனுக்காகவும் தி.மு.க. எதையாவது செய்திருப்பதாக நீங்கள் கருதினால் அது குறித்தும் ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார்... நீங்கள் தயாரா?

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x